Thursday, October 12, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நம் வீட்டில் நமக்கு தெரியாதது !



நம் வீட்டில் நாம் இருக்கிறோம், நம்முடைய பொருள்கள் இருக்கிறது. கூடவே கரப்பான் பூச்சிகள், பல்லிகள் வசிக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் நாம் நம் வீட்டில் வசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

சில சமயம் நம் வீட்டில் உள்ளவர்களை (பொருட்கள்) உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நகையும், பணமும் வைத்திருக்கும் இடம் மட்டும் நன்றாக தெரிந்து இருக்கும். மற்றவைகள் இருக்கும் என்பது தெரியும் ஆனால் தேடினாலும் சமயத்திற்கு கிடைக்காது.

அவசரத்துக்கு தொலைபேசி எண் குறித்து வைக்க ஒரு பேனா தென்படுவதே பெரிய விசயம், மற்றவைகளை சொல்லவும் வேண்டுமா ?

சில பொருள்கள் வீட்டில் இருந்தாலும் அதன் இருப்பை அறியாமல் பாதுகாப்பாக எங்கோ இருப்பதால், இரண்டாவது முறையாக வாங்கி வரும் நிலைமை ஏற்பட்டுவிடுவது பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் நடப்பதே.

அந்த அந்த அறையில் இருக்க வேண்டிய பொருள்கள் பெரும்பாலும் இடம் மாறியே இருக்கும், சமையல் அறையில் இருக்கும் பாலித்தீன் பையை வெட்டும் கத்திரி என்றோ செய்தித் தாள் வெட்டச் சென்றது திரும்பாது. அடுத்த நாளோ வேறு நாளோ தேவைப்படும் போது தான் அதன் ஞாபகம் வரும். தேடி எடுப்பதில் நேரவிரயம், தேவையில்லாத டென்சன் இவைதான் மிஞ்சும்.

நம் வீடு நம்முடைய பொருள்களுக்கான இடம் ஆனால் இவைகள் எங்கு எங்கு இருக்கிறது என்று நமக்கே தெரியாமல் இருப்பது பெரும் கவனக் குறைவு. இவற்றை சரி செய்யமுடியும். வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறையோ வீட்டில் உள்ள பொருள்களை ஒழுங்கு படுத்துவது / பராமரிப்பது நமக்கு பயன் தரும்.

எனக்கு தெரிந்த சில நடைமுறைகளை பட்டியல் இடுகிறேன்

1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு அகற்றவேண்டும் அல்லது அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கு அளிக்கலாம். என்றுமே பயன் ஆகாத பொருட்களை தூக்கிப் போடலாம்.

2. பொருள்களுக்குரிய இடம் என்று அமைத்து அதே இடத்தில் அதே வகையான பொருள்களை வைக்கலாம். சமையல் அறைக்கு பயன்படும் கருவிகள் சமையல் அறையிலேயே வைப்பது, இரும்பு தளவாடங்களுக்கு ஒரு இடம், மின்சாரம் சம்பந்தப்பட்ட எக்ஸ்டன்சன் பாக்ஸ் , டெஸ்டர் போன்றவற்றிக்கு ஒரு இடம், ஸ்டேசனரி பெருள்களுக்கு, படித்த கடிதங்கள் மற்றும் படிக்காத கடிதங்கள் போன்ற வற்றை தனித் தனியாக வைக்கலாம்.

3. அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும்.

4. அன்றாட குப்பைகளுக்கு தனி இடமும், படித்த செய்தித்தாள் போன்றவைகளுக்கு தனி இடமும் இருந்தால் பயன்.

5. அடைக்கப்பட்ட உணவு பொருள்களை பயன்படுத்தும் முன் பயன்படுத்தும் தேதி முடிந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். முடிந்து இருந்தால் உடனே அகற்றப் படவேண்டும். அடிக்கடி கெட்டுப் போகப் கூடிய சமையல் பொருள்களை தனியாக வைத்திருந்தால் உடனடியாக அடையாளம் காண முடியும்.

6. தினமும் பயன்படுத்தும் பொருள் சற்று தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு, உப்பு, பற்பசை போன்ற பொருள்களை ஒன்றாவது அதிகம் வாங்கி வைத்திருந்தால் நல்லது. இதனால் பற்பசையை கடைசி வரை பிதுக்கி எடுத்துவிட்டு ஒரு நாள் அவசரத்திற்கு வேறு வழியின்றி வெறும் ப்ரெஸ்சையோ, கைவிரலையோ பயன்படுத்துமாறு அமைந்துவிடாது.

7.பொருள்களை அவை வைத்திருக்கும் இடத்துடன் குறித்து பட்டியலாக வைத்து இருந்தால் தேடி எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.

8. பிளாஸ்திரி, தலைவலி, சுரம், அஜீரனம், இருமல் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருள்கள் தேவைக்காக வாங்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்து முடிவு தேதி பார்த்து பயன்படுத்துதல் நலம்.

9. விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

10. எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.

பின்குறிப்பு: வீட்டுக்குறிப்பு எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்து எழுதிவிட்டேன். படிக்கும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த வீட்டு பராமரிப்பு குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

13 : கருத்துக்கள்:

said...

இது என்ன மியூசியமா இல்லை வீடா எல்லாம் அந்தந்த இடத்திலயே இருக்கறதுக்கு? கலைஞ்சிருந்தா தான் வீடு. கலையாம இருந்தா மியூசியம்.

என்னடா பார்த்தீபன் கனவு வசனம் எல்லாம் சொல்லறான்னு பார்க்காதீங்க என்னோட சோம்பேறித்தனத்தை நியாயப் படுத்திக்க சொல்லிக்கற வசனம் எங்க அம்மா மாதிரி எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும் அப்படீன்னெல்லாம் சொன்னீங்களா இது ஞாபகம் வந்துடுச்சு ஹிஹிஹி.

said...

//அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும்//

ஹிஹி! இது நல்லாத் தான் இருக்கு!

//விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்//

ஆகா, GK! விருந்தோம்பல் என்ற தமிழ்ப் பண்பாட்டை அப்படியே ஃபாலோ பண்ணூறீங்க! வாழ்க! (அப்படியே, வந்து பேஜார் பண்ணும் விருந்தை துரத்துவது எப்பிடின்னு ஐடியா கொடுத்ததற்கும் நன்றி :-)))))

said...

நல்லா சொல்லியிருக்கிங்க..

ஆனாலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு வீட்டை பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது..

said...

நல்ல பதிவு.

// 1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு அகற்றவேண்டும் அல்லது அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கு அளிக்கலாம். என்றுமே பயன் ஆகாத பொருட்களை தூக்கிப் போடலாம். //

முன்பெல்லாம் எல்லாத்தையும் சேர்த்து வைப்பேன். இப்பொழுது அப்படியில்லை.

// 2. பொருள்களுக்குரிய இடம் என்று அமைத்து அதே இடத்தில் அதே வகையான பொருள்களை வைக்கலாம். சமையல் அறைக்கு பயன்படும் கருவிகள் சமையல் அறையிலேயே வைப்பது, இரும்பு தளவாடங்களுக்கு ஒரு இடம், மின்சாரம் சம்பந்தப்பட்ட எக்ஸ்டன்சன் பாக்ஸ் , டெஸ்டர் போன்றவற்றிக்கு ஒரு இடம், ஸ்டேசனரி பெருள்களுக்கு, படித்த கடிதங்கள் மற்றும் படிக்காத கடிதங்கள் போன்ற வற்றை தனித் தனியாக வைக்கலாம். //

ரொம்பச் சரி

// 3. அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும். //

ஏற்கனவே இருக்குறதெல்லாமே குப்பை மாதிரித்தான் கெடக்கு ஹி ஹி

// 4. அன்றாட குப்பைகளுக்கு தனி இடமும், படித்த செய்தித்தாள் போன்றவைகளுக்கு தனி இடமும் இருந்தால் பயன். //

ஆமாமா

// 5. அடைக்கப்பட்ட உணவு பொருள்களை பயன்படுத்தும் முன் பயன்படுத்தும் தேதி முடிந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். முடிந்து இருந்தால் உடனே அகற்றப் படவேண்டும். அடிக்கடி கெட்டுப் போகப் கூடிய சமையல் பொருள்களை தனியாக வைத்திருந்தால் உடனடியாக அடையாளம் காண முடியும். //

அதெல்லாம் வாங்குறதில்லைங்க. ஹார்லிங்க்ஸ் மற்றும் சிக்கன் சாசேஜ் தவிர. அப்புறம் ஊறுகாய். :-)

// 6. தினமும் பயன்படுத்தும் பொருள் சற்று தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு, உப்பு, பற்பசை போன்ற பொருள்களை ஒன்றாவது அதிகம் வாங்கி வைத்திருந்தால் நல்லது. இதனால் பற்பசையை கடைசி வரை பிதுக்கி எடுத்துவிட்டு ஒரு நாள் அவசரத்திற்கு வேறு வழியின்றி வெறும் ப்ரெஸ்சையோ, கைவிரலையோ பயன்படுத்துமாறு அமைந்துவிடாது. //

ஆமாங்க

// 7.பொருள்களை அவை வைத்திருக்கும் இடத்துடன் குறித்து பட்டியலாக வைத்து இருந்தால் தேடி எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். //

ம்ம்ம்...செஞ்சு பாக்கலாம். அப்புறம் பட்டியல எங்க வெச்சோம்னு தேடுற நெலம வந்துறக் கூடாது.

// 8. பிளாஸ்திரி, தலைவலி, சுரம், அஜீரனம், இருமல் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருள்கள் தேவைக்காக வாங்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்து முடிவு தேதி பார்த்து பயன்படுத்துதல் நலம். //

ஒத்துக்கிறேன். இருந்தாலும் பக்கத்துல எங்க 24மணி நேர மருந்துக்கடை இருக்குன்னு பாத்து வெச்சுக்கிறது நல்லது.

// 9. விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.//

வெச்சிருக்கேன். வெச்சிருக்கேன்.

// 10. எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது. //

ஒத்துக்கிறேங்க. அம்மா அடிக்கடி மாத்தி வெச்சுட்டா கொழம்பீரும்.

said...

உபயோகமான தகவல்கள் கோவியாரே.
இதெல்லாம் தொடர்ந்து செய்வதுதான் பெரிய சவால்!
ஆரம்பிப்பது சுலபம்.

said...

நல்ல பதிவு ஐயா. செயல்படுத்த முயலவேண்டும். சிவபாலன் சொன்னதைப் போல் தான் எங்கள் வீட்டிலும்.

said...

நல்ல பதிவு.

ஆனா பலசமயங்களில் கண் முன்னாலேயே இருக்கும் ஒரு பொருள் அதற்கான தேவை வந்த நிமிஷம்
காணாப்போயிருதே அதுக்கென்ன சொல்லலாம்?

அதுவுமில்லாம கண்முன்னே இருக்கும் காணாமப் போகாம இருக்கும் பொருள் கண்முன்னே தெரியாத
'டொமஸ்டிக் ப்ளைண்ட்நெஸ்' பத்தியும் எழுதுங்க:-))))

said...

///எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.////

மிகவும் கடினமானது இது...

said...

//எங்க அம்மா மாதிரி எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும் அப்படீன்னெல்லாம் சொன்னீங்களா இது ஞாபகம் வந்துடுச்சு ஹிஹிஹி. //

சின்ன குமரன்...!

தூரத்தில் இருக்கும் போதுதான் அம்மாவின் அருமை தெரியும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் !

நன்றி !

said...

//வைசா said...
பிள்ளைகளுக்கு எளிதில் எட்டாத இடத்தில் மருந்துப் பொருள்களை வைக்க வேண்டும்.

அவசியமான ஒரு பதிவு. நன்றி கோவி கண்ணன்.

வைசா
//

வைசா அவர்களே...!

நான் சொல்ல மறந்த கருத்து. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி. மேலும் பாராட்டுக்கு மற்றொரு நன்றி !
:)

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS)
ஆகா, GK! விருந்தோம்பல் என்ற தமிழ்ப் பண்பாட்டை அப்படியே ஃபாலோ பண்ணூறீங்க! வாழ்க! (அப்படியே, வந்து பேஜார் பண்ணும் விருந்தை துரத்துவது எப்பிடின்னு ஐடியா கொடுத்ததற்கும் நன்றி :-))))) //

ரவி...!
அவ்வப்போது சந்துல சிந்து பாடுவதையெல்லாம் சரியாக கண்டுபிடிச்சி போட்டுத்தாக்குறிங்க !

:)

said...

//எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.//

நூத்துல ஒரு வார்த்தைங்க கோவி. இதை சரியாச்செஞ்சா போதும் தேடவேண்டிய அவசியமே இருக்காதுன்னு எங்க ஐயன் சொல்லிக்குடுத்தது.

said...

சில பொருட்களைத் தேடித்தேடி அலுத்து, பின்னர் ஒரு நல்ல நாளில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்து விட்டு .....

அது மீண்டும் 'பழைய குருடி கதவைத் திறடி' (எனக்குத் தெரிந்த பழஞ்சொல் - யாரும் சண்டை போடாதீங்கப்பா) என்று ஆகி.......

எஸ்கே சொல்வது போல் 'ஆரம்பிப்பது சுலபம். தொடர்ந்து செய்வது... தான் கடினம்'
உபயோகமான பதிவு.