Friday, December 05, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்பேச்சுக் கவிஞர்கள் !



வறுமைகள் கூட இவர்கள் வரிகளின் பொற்காசுகள் !
சிறுமைகள் கூட இவர்களின் கவிதை அலங்காரங்கள் !

துன்பவேளையை கவிதை யாழாக இசைப்பவர்கள்,
இன்ப வேளையை கவிதையில் ஏளனம் செய்பவர்கள் !

நாட்டுப்பற்றும் இவர்களால் நக்கல் செய்யப்படும் !
வீட்டுப்பற்றும் இவர்களால் சிக்கல் ஆகிவிடும் !

சோற்றுக்கு வழிதேடாமல் தூற்றலால் பசியாறுவார்கள் !
மாற்றுக்கு துணியில்லாவிட்டாலும் காற்றுக்கு ஆடை தைப்பார்கள் !

நெருப்பு சுடுவதுதான் இயற்கையா ? எங்கள் சொற்களின்,
வெறுப்பு சுடாவிட்டால் நீர் இயற்கை எய்தியவர் என்பர் !

வெடிகுண்டு வெடித்துவிட்டால் வெகுண்டெழு(த) - வரி
அடிகொண்டே அனைத்தையும் அடக்கிவிட நினைப்பர் !

பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !

அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்துவிட்டர் என்பர், சோம்பியிருந்தே
அரிசிகூட இவர்கள் கவிதையால் வெந்துவிடுமென்பர் !

வரிகளை வரிசை மாற்றிப் போட்டுவிட்டு, போற்றிக் கொடுக்கும்
பரிசுக்கு என் கவிதை பெற வாய்ப்பில்லை என்பர் !

கற்கண்டு இனிப்பதெல்லாம் இனிப்பா ? என்
சொற்கண்டால் அவை வெறும் இளிப்பே என்பர் !

சமூக அவலம் இவர்களின் எழுத்துக்கு தீனி, அதைப் போக்கி
சுமூகமாக்க இவர்கள் இறங்கியிருக்கிறார்களா நானி ?


பின்குறிப்பு : கவிஞர் நெல்லக் கண்ணன் நடத்தும் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக்கும் இந்த கவிதைக்கும் தொடர்ப்பு இல்லை :)