Thursday, May 07, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

பட்டையைக் கிளப்பும் ஜெ, பதுங்கும் திமுக கூட்டணி

கத்திரி வெயிலில் மேலும் சூட்டைக் கிளப்பும் வகையில் ஜெ வின் பேச்சும் தேர்தல் பரப்புரை பயணமும் அமைந்திருக்கிறது. கட்சி சாராது திமுக அனுதாபிகளாக இருந்த (என்போன்றோர்கள்) ஜெ வின் பேச்சை வெகுவாக ரசிக்கின்றனர். திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜெ-வால் தான் முடியும் என்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டச் சிறப்புகளைச் சொல்லிவிட்டு, அந்த மாவட்டத்தில் அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைச் சொல்லி, திமுகவின் மீதும் தமிழக திமுக கூட்டணி தலைவர் மீது சரமாரி ஏவுகனைக் குற்றச் சாட்டு தாக்குதல் தொடுக்கிறார். 'மக்களை சந்திக்க பயந்து போய் மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார் கருணாநிதி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி ஓய்வு கொடுங்கள் ' என்கிற ஜெவின் அட்டாக் திமுகவினரை பெரிதாகவே தாக்கி இருப்பது ஸ்டாலின் 'நாகரீகமற்றவராக பேசுகிறார் ஜெ' என்ற பதில் பேச்சில் தெரிகிறது.

தேர்தல் பரபரப்பில் பரப்புரை (பிரச்சார) பயணம் செய்வதில் பிறகட்சியினரைக் காட்டிலும் ஜெ மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். கருணாநிதி காங்கிரசுகாரர்களான காமரசரை 'காமராசரின் வாடகை வீட்டை படம் பிடித்த கருணாநிதி ஏழையின் வீட்டைப் பாரிர் என்று முரசொலியில் படம் போட்டு அவமானப்படுத்தினார், பக்தவச்சலத்தை பத்துலட்சம் பக்தவச்சலம்' என்று சொன்னார்' என்று காங்கிரசையும் திமுகவையும் பற்ற வைத்தார் ஜெ, வழக்கமாக கருணாநிதி மட்டுமே பழசை கிண்டி கிண்டி பேசுவார். ஜெவின் ஈழம் பற்றி தெளிவான பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது

ஜெ-வின் தேர்தல் உத்தி சிறப்பாகவும் கவனம் ஈர்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக திணருவதைப் பார்க்கும் போது கட்சி சார்பில்லாமல், தொண்டராக இல்லாமல் இருக்கும் திமுக அனுதாபிகள் திமுகவின் நிலை குறித்து பரிதாபப்படுகின்றனர். நானும் தான் :)
ஜெ என்றால் வெற்றி என்று மீண்டும் நிருபணம் செய்துவிடுவார் என்று நன்றாகவே தெரிகிறது.

கருணாநிதி கர்ணனாக இருந்தாலும் கூட்டு சேர்ந்தது துரியோதனர்களிடம் என்பதால் தற்போதைக்கு திமுக கூட்டணி பற்றி அனுதாபம் மட்டுமே படமுடிகிறது. சோனியா தமிழக (காங்கிரஸ் மற்றும் திமுக) ஆதரவை பெரிதாக கணக்கிட்டுக் கொள்ளவில்லை, எனவே தேர்தலுக்கு பிறகு திமுகவை கழட்டிவிடுவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக சோனியாவின் தமிழக பரப்புரை பயணம் நிறுத்தப்பட்டதை வைத்து பார்வையாளர்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜெ... ஜெ... என தமிழுணர்வாளர்களை இந்த தேர்தல் முடிவு உற்சாகப்படுத்தும் என்று தெரிகிறது.

(தேர்தல் முடிவு மட்டும் தானா உற்சாகப்படுத்தும் அதன் பிறகுமா ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்)