Sunday, December 31, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தேன் கூடு போட்டி முடிவுகள் - எஸ்கே

தேன்கூடு - தமிழோவியம் நடத்திய பதிவர்களுக்கான மாதாந்திர (இறுதி) போட்டியில்,

எனது கவிதை "குறும்பெல்லாம் குறும்பா?" [தேன்கூடு] வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. எனது குறும்பு கவிதையை படித்தும், பாராட்டியும், வாக்களித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் முதல் இரண்டு இடம் பிடித்த
அரைபிளேடு, நாமக்கல் சிபி அவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியை நன்றாக நடத்தி பதிவர்களை ஊக்குவித்த தேன்கூடு - தமிழோவியம் நிர்வாகத்தினருக்கு நன்றி !

முருகன் அருள் முன்நிற்கும்

மீண்டும் நன்றி


- எஸ்கே (ஆத்திகம்)


பதிவர் நண்பர் எஸ்கே ஐயா அவர்களின்
பதிவில் தொடர்ச்சியாக திருவெம்பாவை எழுதிவருவதால் இந்த பதிவு இங்கே இடம் பெறுகிறது !


இறுதி முடிவுகள்:

1 கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட 52.2%
2 குறும்பு - நாமக்கல் சிபி 48.52%
12 குறும்பெல்லாம் குறும்பா? - sk 48.28%

வெற்றி பெற்ற மூவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், எனது போட்டிக்கதையை படித்து, பாராட்டி, வாக்களித்தவர்களுக்கு நன்றி !

- கோவி.கண்ணன்


Thursday, December 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஈனஸ்வரம் ?

தூரத்தில் கேட்டது ஓலம் ...
கூடவே கெட்ட கெட்ட வார்த்தைகள்
ஆபாச திட்டுக்கள்... கேட்ட
நானும், அருகில் இருந்தவர்களும்
காதுகளைப் பொத்திக் கொண்டோம் !

பக்கத்தில் இருந்த பண்பாளரிடம்,
மெதுவாக கேட்டேன் ஏனிந்த ஓலம் கேட்கிறது ?
ஏதாவது தெரியுமா ? சொல்லுங்கள் ! என்றேன் !
இது ஒரு ஈனஸ்வரம் ! எப்போதும் கேட்பதுதான் !
இவன் ஒழிந்துவிட்டால் அனைவருக்குமே நிம்மதி என்றார் !

காரணம் தெரிந்து கொள்ளும் ஆவலில்
ஓலக்குரலின் ஓசைவரும் இடம் நோக்கிச் சென்றேன்.
அருகில் சென்றதும் அதிர்ச்சி அடைந்தேன் !

அம்மனமாக்கப்பட்டு,
ஆற்றாமையால் அழுது கொண்டே
திட்டிக் கொண்டிருந்தான் மிதிபட்ட
ஒடுக்கப்பட்டவன் ஒருவன் !
அருவருப்பான தோற்றத்தில்
இருந்த அவனை பலர் மிதித்துக் கொண்டிருந்தனர் !

தைரியமாக பேசுகிறானே என்று அவர்கள்
அவனை மேலும் மேலும்
மிதித்துக் கொண்டிருந்தனர் !

அழும் குரலிலென்றாலும் ஆற்றாமையில்
இருந்த அவனிடம் நிதானம் இல்லை.
இருக்கவும் முடியாது !
கோபத்தில் அவன் வீசிய வார்த்தை வீச்சில்
அருவருப்பும் ஆபசமும் இருந்தாலும்
அருகில் நடந்ததைப் பார்த்த நான்
ஆடிப் போய்விட்டேன் !

அடிப்பவர்களை தடுக்கும் ஆற்றல் இல்லாததால்,
ஆற்றாமையில் திட்டுபவனை ஆற்றி
அடக்குவதற்கும் வழிதெரியாமல்
அமைதியாக விழித்துக் கொண்டிருந்தேன் !

தைரியமாக பேசுகிறானே என்று அவர்கள்,
'இழிபிறவியே ! ஒழிந்து போ !!', என்று
அலங்கார வார்த்தையால் அர்சித்துக் கொண்டே,
அவனை மேலும் மேலும் மிதித்துக் கொண்டிருந்தனர் !

அவனை அடித்துக் கொண்டே என்னையும்
ஏளனமாக பார்த்தவர்களைப் பார்த்து
நானும் முகம் சுளித்து திரும்பினேன் !

திரும்பிவரும் போது மனது சொல்லியது,
இவன் குரல் இன்னும் வேகமாக ஒலிக்க வேண்டும் !
இவன் தலைநிமிர்ந்து நிற்கும்வரை,
இவனை அடிப்பதை அவர்கள் நிறுத்தும்வரை,
இவனின் குரல் தான் இவனுக்கும் தைரியம் கொடுக்கிறது,
இவனைப் போன்றவர்களை மீட்க வைக்க முழங்குகிறது !
இன்னும் ஒலிக்கவேண்டும் !

இவன் சங்கிலிருந்து குரல் மேலும் பலமாக
எட்டு திக்கும் கேட்கும் வரை செல்ல வேண்டும் !
முன்பு ஈனஸ்வரமாக நான் உணர்ந்த குரல்,
இப்பொழுது சங்கு முழங்குவதாக உணர்த்துகிறது!





பின்குறிப்பு: திண்ணியத்தில் மலம் புகட்டப் பட்ட தலித்களுக்கு நேர்ந்த கொடுமைகளை முன்பு படித்து இருக்கிறேன், சமீபத்தில் ஐயா தருமி அவர்களின் LET US HIT THE NAILS RIGHT ON THEIR HEADS இந்த பதிவைப் படித்தேன். வலைப்பதிவுகளில் ஜாதி முறைகள் சரியே என்று சொல்லும் பதிவுகளைப் படித்தும் இருக்கிறேன். இவற்றினால் ஏற்பட்ட எண்ணங்களின் விளைவால் எழுந்தது இந்த புனைக் (புதுக்) கவிதை.

புத்தாண்டு வாழ்த்துக்கள் : வரும் புத்தாண்டில் நம் அனைவருக்குள்ளும் ஒற்றுமை ஓங்கி, தமிழ்வளர்சிக்கும், தமிழர் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஏற்றவிதமாக நம் எழுத்துக்களும், கருத்துக்களும் அமைந்து நம் அனைவருக்கும் பயனளிக்கட்டும் ! என்று பதிவர் அனைவரையும், மேலும் தமிழ்மணம், தேன் கூடு நிர்வாகிகளையும் வாழ்த்துகிறேன்.

Wednesday, December 27, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் ...

ன்னு ஒரு பழமொழி சொல்லி பனை மரத்தில் நெறி கட்டும் என்று சொல்லுவார்கள். அதாவது எங்கேயே நடக்கிற நிகழ்வு மூலம் வேறு இடத்தில் பாதிப்பு இருக்கும். நேற்று (26/டிச/2006 கவனிக்க அதே டிச 26) தைவானில் நடந்த நிலநடுக்கம் சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. சிங்கப்பூரில் நிலநடுக்கம் உணரப் படவில்லை. ஆனால் கடல் வழியாக சென்ற அதிவேக இணைய தொடர்பு நுண்ணிலை கம்பிகள் ( பைபர் ஆப்டிக்ஸ்) நில நடுக்கத்தால் அறுந்துவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் இணைய தொடர்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இணைய தளங்களுக்கு செல்ல முடியவில்லை.

சிங்டெல் நிறுவன தகவல் படி இணைப்பை சரிசெய்ய ஒரு வார காலம் கூட ஆகலாம் என்று சொல்லுகிறார்கள்.

வீட்டுக் கணனிகளுக்கு ஒர அளவுக்கு இணைப்பு கிடைக்கிறது. அதுவும் மிக குறைவான வேகத்தில் தான். ஜிமெயில் முற்றிலும் தொடர்பற்றதாக இருக்கிறது. அலுவலகங்களுக்கான இணைப்பில் தமிழ்மணத்தை கூட பார்க்க முடியவில்லை.

மற்றபடி ஆஸ்திரேலியா, ஹாங்காங் மற்றும் உள்ளூர் இணைய தளங்களுக்கு செல்வதில் குறைபாடு இல்லை.

ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் தொலைவு ப்ராக்சி சர்வர் இருந்தால் pkblogs போல ஒன்று இருந்தால் ஒரு வார காலத்திற்கு ஓட்டலாம். pkblogs அலுவகத்தில் வேலை செய்யவில்லை.

இணையம் இல்லையென்றால் எல்லாமும் முடங்கும் என்ற நிலைதான் அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு இப்போது எற்பட்டு உள்ளது.



Tuesday, December 26, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

கடன் பெற்றார் நெஞ்சம் (மகாலெட்சுமி)

மகாலெட்சுமியின் தந்தையிடம் பேசிய போது, "என் மகளைப் படிக்கவைக்க கிடைக்கப் போகும் பணம் இனாமாக வேண்டாம் சார். கடனாக கிடைத்தால் போதும். இயன்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னார். வறுமையிலும் தன்மானத்தோடு வாழ நினைக்கும் அந்த தமிழனைப் பற்றி பெருமைபட்டுக்கொண்டேன்.

ஆகவே, வலைப்பதியும் நண்பர்களே! கிடைத்த பணத்தை அவருக்கு வட்டி இல்லா கடனாக வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். அவர் சிறுகச்சிறுக திரும்பக்கொடுத்த பின், உண்மையில் அவதிப்படும் வேறு யாருக்கேனும் அந்தே பணம் மீண்டும் உதவ பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன்.

மேலும் படிக்க ...

Monday, December 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா

திரைகலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் அவ்வப்போது சிங்கப்பூரில் நடக்கும், இவற்றில் பலவற்றை பார்க்கச் சென்றுருக்கிறேன். முதல் முறையாக தமிழ் பண்ணிசை விழா சிங்கப்பூரில் நடப்பதாக நண்பர் குழலி பதிவிட்டு இருந்தார். அது பற்றிய செய்தி சிங்கை தமிழ் நாளிதழ் தமிழ்முரசுவிலும் வந்திருந்தது. தமிழ் இசை என்பதால் ஆர்வம் ஏற்பட சென்று வந்தேன்.

கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா தமிழக பா.ம.க தலைவரும், பொங்குதமிழ் பண்ணிசை மன்ற நிறுவனருமான மருத்துவர் ராமதாசு அவர்கள் தலைமையில் இனிதே நடந்தேறியது.

நிகழ்ச்சியை தொகுத்துவழங்கிய சிங்கப்பூர் வானொலியின் அறிவிப்பாளர் திருமதி. மீனாட்சி சபாபதி சங்கீத மூம்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர்கள் எவ்வாறு தமிழ் இசையிலிருந்து தெலுங்கு மற்றும் வடமொழி கீர்த்தனைகளை அமைத்து இந்திய இசைக்கு அடிகோலினார்கள் என்று ஆரம்பித்து அருமையான உரையுடன் தமிழ் இசை துடங்கியது.



திரை இசைப் பாடல்கள் மருந்துக் கூட இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் பண்ணிசையுடன் தேவாரம் முதல் பாபநாசம் சிவன் முதலியோர் பாடல்களும், குனங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இஸ்லாமிய பாடல்களும் , வேதநாயகம் பிள்ளை , வீரமாமுனிவர் தேம்பாவனி என பல்சமய பாடல்களும் சிறப்பாக பாடப்பட்டன.



முத்தாய்ப்பாக துள்ளல் இசையுடன் கூடிய கிராமியப் பாடல்களுடன் இசை பாடல்கள் முடிவுற்றதும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், திரு ஜி.கே மணி வரவேற்புரை, எம்.எல்.ஏ, திரு ஏ.கே.மூர்த்தி எம்.பி வழிமொழிய, இறுதியாக மருத்துவர் ராமதாசு தமிழிசைப் பற்றிய தலைமை உரை நிகழ்த்த விழா சிறப்புடன் முடிவுற்றது.

விழாவில் நான் குறையாக கண்டது,

முழுக்க முழுக்க டிசம்பர் கச்சேரிகளைப் போல் வாய்ப்பாட்டுகள் பாடியது கொஞ்சம் அயற்சியை கொடுத்தது. பாடிய பாடல்கள் நடனத்துக்கு ஏற்றப் பாடல்களாக இசையுடன் இருந்திருந்ததால் நாட்டிய நடனம் அதனுடன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கடைசியாக துள்ளல் இசை கிராமியப் பாடல்களை 30 நிமிடங்கள் பாடியதற்கு பதிலாக இடையிடையே பாடியிருந்தால் இசைவிழாவில் இடையிடையே பலர் எழுந்து சென்றதை குறைத்திருக்கலாம்.

நிறையாக பார்த்தது,

குத்தாட்டமோ, திரை கலைஞர்கள் ஒருவர் கூட இடம் பெறாத இந்த நிகழ்ச்சி 4 மணி நேரத்திற்கும் மேல் ஏற்பாட்டளர்கள் நடத்திக்காட்டியது ஒரு சாதனைதான்.

மேலும் இந்த இசைவிழா பற்றிய பல தகவல்களை நண்பர் குழலி என்னுடன் பகிர்ந்து கொண்டார் அவற்றை அவர் தனது பதிவில் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

படங்கள் உதவி : பதிவு நண்பர் குழலி

Thursday, December 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

அழகுக்கு மறுபெயர் மெளனம் !



அழகுக்கு மறுபெயர் மெளனம் !

ஆர்பரித்தலை விட மெளனம்
அழகாகப்படுகிறது எனக்கு !
தீண்டும் தென்றல்,
மழலையின் சிரிப்பு,
பொன்னிற விடியல்,
மஞ்சள்நிற மாலை,
அமைதியான நீரோடை,
மெலிதாக தழையசைத்து
தலையசைக்கும் பசுமை,
மரத்தடியில் உதிர்ந்து
இரைந்த பூக்கள், பூ
இதழ்மேல் பட்டாம்பூச்சி,
பகலில் பைங்கிளி,
இரவில் மின்மினி,
வண்ணம் கலைந்து
மறைந்து கொண்டிருக்கும் வானவில்,
அமைதியாக நகர்ந்து செல்லும் மேகங்கள்,
வயல்வெளிகளில் ஒற்றையடிப் பாதை,
இன்னும் எத்தனையோ
அழகு அத்தனைக்கும்
மறுபெயர் மெளனம் !

Sunday, December 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பின்னூட்டத்தில் படம் போடுவோம் வாங்க !

சென்ற இடுகையில் பின்னூட்டத்தில் படம் போட முடியும் என்று சொல்லிவிட்டு இருந்தேன் எவ்வாறு என்று இப்போது பார்ப்போம்.

ப்ளாகர் உதவியில் டாக்குமண்ட் செய்யாமல் ப்ளாக்கர் விட்டு வைத்திருப்பது பின்னூட்டத்தை திருத்துதல் (comment edit) என்ற வழிமுறை.

அதற்கான வழிமுறை வா.மணிகண்டனின்
பேசலாம் வலைப்பூவில் இருக்கிறது.

அதாவது பின்னூட்டம் மாற்றுதல் / திருத்துதல் (comment edit) என்ற வழிமுறை மூலம் பின்னூட்டத்தில் படங்களை இணைக்க முடியும்.

அது எவ்வாறு என்று பார்ப்போம்.

1. அவரவர்களுடைய வலைப்பூவில் இதைச் செய்வது மிகச் சுலபம். மற்றவர்களுடைய இடுகைகளில் போடும் பின்னூட்டத்திற்கு பின்னூட்டமிடுபவரே படங்களை இணைக்க முடியுமா ? என்று முயன்று பார்க்கவில்லை.

2. முதலில் படம் இணைக்கவேண்டிய பின்னூட்டத்தை வெளியிடவேண்டும். அல்லது ஏற்கனவே வெளியிடப்பட்ட பின்னூட்டத்திற்கு படம் இணைக்க விரும்பினால் அதிலில் இணைக்க முடியும். (படம் பார்க்க)



3. அவ்வாறு படம் இணைக்க விரும்பும் பின்னூட்டத்தில் (Dust Bin) நீக்குவதற்கான ஐகான் (குறியீட்டுப் படம்) இருக்கும். அது தெரியவில்லை என்றால் ப்ளாக்கரில் sign-in பண்ணவேண்டும். அவ்வாறு sign-in விட்டு refresh செய்தால். நீங்கள் ப்ளாகார் கணக்கின் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் அனைத்து பின்னூட்டங்களிலும் (Dust Bin) நீக்குவதற்கான ஐகான் (குறியீட்டுப் படம்) இருக்கும். குறிப்பிட்ட பின்னூட்டத்தில் உள்ள ஐக்கானை எலிக்குட்டி இடது காதைத்திருக அழுத்தி (mouse left click) கிளிக்க வேண்டும்.

4. கிளிக்கிய உடன் பின்னூட்டம் மாற்றுதல் / திருத்துதல் (comment edit) பக்கத்திற்கு செல்லும் (படம் பார்க்க) . மேலே உரல் (url) முகவரியில் (Address) இருக்கும் delete-comment.g ? க்கு பதிலாக post-edit.g? தட்டச்சு Enter பட்டனை தட்டுங்கள்.



5. இப்பொழுது ப்ளாகரில் சரி செய்ய வேண்டிய பின்னூட்டம் காணப்படும். இங்கு பின்னூட்டத்தையும் சரி செய்யலாம், படங்களையும் இணைக்கலாம். அங்கு சென்றதும் படம் சேர்க்க உதவும் ஐகானை கிளிக் செய்து படத்தை இணையுங்கள். (படம் பார்க்க)









6. சேமிக்கப்பட்ட படங்களையோ அல்லது படங்களின் உரல் (URL) கொடுத்து, upload image பட்டனை அழுத்தவும், சரியாக upload ஆனதும். படம் இப்பொழுது முகப்பில் இப்பொழுது தெரியும் (படம் பார்க்க)



7. கடைசியாக Publish Post பட்டனை அழுத்த, பின்னூட்டத்திற்கு படம் சென்று விடும்.


8. படத்தைப் பார்பதற்கு இடுகைப் பக்கத்திற்கு சென்று பக்கத்தை refresh செய்தால் படம் இப்பொழுது பின்னூட்டத்தில்.




அவ்வளவு தான்.

பி.கு : படங்களை வெளியிடும் போது காப்புரிமை விதிகளையும், வெளியிடும் படங்களின் கண்ணியம் குறித்தும் நினைவு வைத்துக் கொள்ளவேண்டும், சிறிய படங்களாக மாற்றி போடுங்கள் பக்கம் refresh ஆகும் நேரம் குறையும்.

இனி பொன்ஸ் பக்கங்களில் யானை ஊர்வலங்களையும், நாமக்கல்லாரின் கலாய்த்தல் திணையில் கடி ஜோக்குகளை படத்துடன் பார்த்தால் என்னை அடிக்க ஓடி வராதீர்கள்.
தமிழ்மணம் கருவிபட்டை

பின்னூட்டத்தில் படம் போட்டுவது எப்படி ?

லைப்பூவில் படம் போடுவதே தகராறான, சவாலான விசயம். ஆனால் சில வழிமுறைகளை கையாண்டால் எல்லாம் எளிது. நம் நண்பர்கள் படம் மட்டுமில்லாது பாட்டுக்கள், ப்ளாஸ் இமேச்ஜ், அசைவு குறும்படங்கள் எல்லாமும் ஏற்றிவிடுகின்றனர். இவையெல்லாவற்றையும் பின்னூட்டத்திலும் கொண்டு வரமுடியும்.

படம் போடுவது என்பது 4 பக்கங்களில் சொல்லவேண்டியதை ஒரு சின்ன படத்தின் மூலம் சொல்லிவிட முடியும். காதைவிட கண்கள் செய்திகளை வேகமாக மூளைக்கு அனுப்பும்.

எனக்கு எழுதுவதிட்டு படம் காட்டுவது பிடித்தமான விளையாட்டு.

இடுகையில் படம் போட முடியும் ! பின்னூட்டத்தில் படம் போட முடியுமா ?
செந்தழலார் பதிவில் ஒரு அனானி கேட்டு இருந்தார். நான் அதுவரையில் பின்னூட்டத்தில் படம் யோசித்து இருந்ததில்லை.

பிறகு முயற்சித்துப் பார்கலாம் என்று முயன்றேன். என்ன ஆச்சரியம் பின்னூட்டத்தில் படம் போட முடிந்தது !

பின்னூட்டத்தில் படம் என்ன ?

பப்படமே போடலாம் !

எப்படி ?

அடுத்த பதிவில் ...

Wednesday, December 13, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பெரியாரும் சிறியோர்களும்!

ஆத்திகம் அறிவிழந்து மக்களின் வாழ்வியலை கேள்விக் குறி ஆக்கிய போதெல்லாம் சமணர், புத்தர் இன்னும் எண்ணற்றோர் வரிசையில் நாத்திக பெரியார்கள் தோன்றிதான் மக்களின் வாழ்வியலை செம்மை படுத்துகின்றனர். அது சிலகாலம் வரை பிரதிபளிக்கும் அதில் உள்ள நாத்திக கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு ஆஸ்திகம் வளரும் வளந்து வந்திருக்கிறது. புத்தர் சிலைகள் உடைந்த / உடைத்த இடத்தில் தான் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன.

மக்களை அடிமைபடுத்தியே வாழ்ந்துவரும் கூட்டம் ஆத்திகத்தின் அடித்தளத்தில் இருப்பதால் ஆன்மிக கருத்துக்களை இதிகாசங்களாக புனைந்து பூஜை புனஷ்காரமென அடிப்படை கருத்துக்களை புதைத்துவிட்டு மூடநம்பிக்கைகள் என்ற மரணகுழியில் மக்களை மறுபடியும் தள்ளிவிடுவர். இதுதான் காலம் காலமாக நடந்துவருகிறது. மூடநம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் சாடாமல், பெண் அடிமை என்ற பிற்போக்கு தனங்களையும் சாடி சமூக சீர்திருத்தங்களை செய்து தமிழக மக்களையே விழிப்புற செய்தவர் பெரியார். இது போன்று மக்கள் நல சீர்திருத்தங்களை செய்ததால் மகாத்மா காந்தி தேச பிதா என்று இந்திய குடிமக்களாலும், பெரியார் தந்தை பெரியார் என்று தமிழ்மக்களாலும் அழைக்கப்படுகிறார்.

பெரியாரின் கருத்துக்களை எல்லாம் நாத்திகம் என்று கூறி ஆத்திக கமண்டலத்தில் அடக்க முயன்று தோற்றுப் போனவர்கள் இன்று அவருக்கு அவமரியாதை செய்து தூண்டிவிட்டுப்பார்க்கிறார்கள். எனக்கெல்லாம் பெற்றோர் வழியாக பெரியார் நாத்திகர் என்று மட்டும் தான் போதிக்கப்பட்டு வந்தது. பெரியாரின் சீர்திருத்தமோ வெங்காயங்களோ எதுவோமே தெரிந்திருக்கவில்லை. பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பெரியாரைப் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். இவர்கள் எதிர்க்காவிட்டால் எனக்கும் பெரியாரைப் பற்றி தெரிந்திருக்காது.

பெரியாருக்கு முன்பு சாதி இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழையமுடியும் அதுவும் தூர நின்றுதான் வணங்க முடியும் என்ற நிலை இருந்துவந்தது நமக்கு தெரியவருகிறது, ஆழ்வார்கள் தீண்டத்தகாத குலத்தில் பிறந்தார் என்று கூறி பெருமாள் பக்கத்தில் வைக்க தகுதியற்றது என்று சாதி வெறியில் சிலையை கூட ஆத்திக ஆதிக்க சக்திகள் தள்ளிவைத்ததெல்லாம் தாத்தாசாரியாரே நக்கீரனில் புட்டு புட்டு வைத்தார். பெரியார் சிலை ஸ்ரீரங்கத்தில் இந்துக்களை அவமானப்படுத்துகிறது என்று தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட சாதாரண இந்துக்கள் சொல்லுவார்களா ? முடியாது ஏனென்றால் தாழ்த்தப்பட்ட இந்துக்களும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களும் கோவிலுக்குள் செல்ல முடிகிறதென்றால் அது பெரியார் இல்லாமல் பெருமாள் வந்தா அழைத்துச் சென்றார் ? பெரியார் சிலையை கோவிலுக்கு முன்பு வைப்பதுதான் சரியான இடம். பெரியாரால் தான் தங்களால் கோவிலுக்கு உள்ளே செல்ல முடிகிறதென்று பெரியார் சிலையை பார்க்கும் போதெல்லாம் அவர்கள் நன்றி கூர்ந்து நினைத்துக் கொண்டே கோவிலுக்குள் செல்லுவார்கள். பெரியார் மட்டும் இல்லையென்றால் கோவிலுக்குள் சென்றிருக்கவே முடியாது. தாழ்த்தப்பட்ட இந்துக்கள் அனைவருமே தீண்டாமை கொடுமையிலிருந்து மீள மாற்று மதத்தை நாடி போய் இந்து மதமே அழிந்திருக்கும். பெரியார் மறைமுகமாக இந்து மதத்திற்கு நன்மையே செய்திருக்கிறார். அதற்காக இந்துக்கள் அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்.

இதெல்லாம் இந்துத்துவா வாதிகளுக்கு தெரியாதா ? தெரியும் ! பெரியார் சிலை கோவிலுக்கு முன்பு இருந்தால் தீண்டாமை கொடுமைகளும், மனு(ஸ்மிருதி)அநீதி வரலாறுகள் மறைந்துவிடாதே என்ற ஆதங்கம் தான். எதுவும் செய்ய முடியாத ஆதங்கத்தில் தான் பெரியாரை மாமா வென்று மரியாதை குறைவாக சொல்லிப்பார்க்கிறார்கள். இவர்களால் மறைந்து கொண்டு மட்டும்தான் இவற்றைத்தான் செய்ய முடியும். இவர்களின் தன்னிலைமறந்த சொற்களால் தூண்டப்பட்டு கோபப்படுபவர்களால் மூலம் அடிவாங்குபவர்கள் எவரென்றால் அஞ்சுக்கும் பத்துக்கும் கடற்கரையில் உட்கார்ந்து தெவசத்துக்கு மந்திரம் சொல்லும் பூனூல் போட்ட ஏழை பிராமனர்தான்.

சிலைக்கு சக்தி உண்டென்று ஒப்புக் கொள்கிறீர்களா ? கேட்கிறார்கள் ! சிலைக்கு சக்தி இருக்கிறதோ இல்லை என்று கூட சொல்லாம் ஆனால் அதைவைத்து மரியாதை செய்பவர்களுக்கு சக்தி அதிகமாகவே உண்டு அதுதான் வண்முறையாக வெடிக்கிறது. எங்கள் முப்பாட்டனார் செய்த தீண்டாமைக்கு எங்களை ஏன் திட்டுகிறாய் ? நல்ல கேள்வி. இன்றை தேதியில் இணையத்தில் எழுதி கொண்டு இருக்கும் எவருக்கு பூனூல் அறுக்கப்பட்டது ? பெரியார் என்றால் ஏன் இன்னும் இந்த சிறியோர்கள் வண்மம் பாராட்டி அவப்பெயரும் அவமரியாதையும் செய்யவேண்டும் ?

Friday, December 08, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

காதல் வந்துடுச்சி ... (தே.கூ.போட்டி)

லாரி வந்து நிற்கும் சத்தம், சன்னல் வழியாக பார்த்தேன் மாடியில் படித்துக் கொண்டிருந்த என் கவனம் சட்டென சிதற...

எதிர்த்தவிட்டுக்கு புதிதாக லாரி சாமாண்களுடன் வந்திருந்தது ஒரு குடும்பம், ஒரு தொப்பையுடன் சொட்டை தலை அப்பன் , அவர் மனைவி, அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்பது போல் அப்படி ஒரு மகள்.

'ஆக, நான் தேடிக் கொண்டிருந்த சிட்டுக் குருவி இதுதானோ ? ம் மடக்கிட வேண்டியதுதான்' மனதுக்குள் மல்லிகை பூ வாசததுடன் பூத்தது.

அன்று இரவு 'அவள் எனக்குத்தான், அதற்கு என்ன வேலையோ அதை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்' என்று பலவாறு நினைத்துக் கொண்டு புரண்டு படுத்திருந்தேன்.

மறுநாள் காலையில்,

"அம்மா, எதிர்த்தவீட்டில் யாரோ புதுசா குடிவந்திருக்காங்க போல..."

"ஒரு பொண்ணு வந்திருக்கா, பாத்திருப்பியே... அவள் இன்னிக்கு காலையில் கிளம்பி போய்டா ... பழைய ஊரில் ஒரு வாரம் ஹாஸ்டலில் தங்கிருந்திட்டு சனிக் கிழமைதான் வருவாளாம்"

'அம்மா நான் என்ன கேட்கப் போகிறேன் என்று எப்படி நினைத்தார்கள் ...?' நினைத்து

"ஹி ஹி அப்படியா ...? " அசடு வழிந்தேன்.

அன்று மாலை,

'மச்சி சூப்பர் பிகரு விட்டுக்குப் பக்கத்தில் குடி வந்திருக்கு' அடுத்தநாள் நண்பர்களிடம் சொன்னேன்

'டேய்... பொண்ணுங்களைப் பார்த்தாலே பொண்ணுமாதிரி வெட்கப் படுகிற நீ பிகருன்னு சொல்றது ஆச்சிரியமாக இருக்கிறது' காலாய்த்தார்கள், ரசித்தேன்

'அட... ஆயிரம் பொண்ணப் பார்த்தாலும், மனசுக்கு பிடிச்சிருந்தாதானே நினைக்க முடியும் ?, இது தான் நான் தேடிய ஆளாக இருக்கும்'

'ம்... ஒனக்கும் லவ் வந்திருக்கு.. நடத்துடா, ஆனா கர்சிப் இல்லாமல் போய்விடாதே ?'

'ஏன் ? ஏன் ? போனா என்னவாம் ?"

"சளி மூக்குன்னு சொல்லிடப் போவுது"

**************

அவுனுங்க சொல்றதிலும் விசயம் இருக்கு,

சின்ன வயசிலேர்ந்தே எனக்கு மூக்கில் சளி அவ்வப்போது கொட்டும், ஸ்கூல் படிக்கிற காலத்திலேர்ந்து பசங்க அதை வச்சு

'சளி மூக்கன் வரான்டா, டேய் சளி மூக்கு'
என்று கண்டபடி கிண்டல் செய்து வெறுப்பேற்றுவார்கள், அப்படிச் சொல்லும் போது கோபம் மண்டைக்கு ஏறி அடித்து துவைத்துவிடுவேன். ஆனாலும் அவுனுங்க இந்த நாள் வரைக்கும் திருந்தினதா தெரியலை.'செல்வா' என்கிற என்பெயரை அவர்கள் மறந்தும் நினைப்பதில்லை. அதும் பொண்ணுங்களுக்கு முன்னால் கிண்டல் பண்ணினால் தொலைந்தார்கள். பத்தடி தள்ளி நின்னு சொல்லிட்டு ஓடிடுவானுங்க.

இவனுங்கலெள்ளாம் எனக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே நண்பர்கள், நாங்கள் ஐந்தாம் வகுப்பு படித்தபோது

ப்ரியான்னு சப்இன்ஸ்பெக்டரோட பொண்னு, அதை எல்லா பசங்களும் 'தக்காளி, தக்காளி' ன்னு கூப்பிடுவாங்க, நானும் கூப்பிடுவேன்

எனென்றால் மதியம் சாப்பிட்ட பிறகு ப்ரியா தினமும் ஒரு தக்காளியை பச்சையாக தின்னும்.

ஒரு நாள் அது வீட்டுப்பாடம் எழுதாம வர டீச்சர் திட்டினாங்கன்னு ... அந்த பொண்ணு அழ,

இண்டர்வல் நான் 'டேய் அழுகின தக்காளிடா வருதுடா' என்று சொல்ல, அந்த பொண்ணுக்கு பயங்கர கோவம்

"டேய் மூக்குசளி, இருடா எங்க அப்பாகிட்ட சொல்றேன்" என்றது

எனக்கு பதிலுக்கு கோபம் வர, அவள் கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் அறைந்தேன், அதன் பிறகு என்னை டீச்சர் சாயங்காலம் வரைக்கும் பெஞ்சு மேல் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் நான் பயந்து கொண்டு பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டேன்.

மறுநாள் அவளோட இன்ஸ்பெக்டர் அப்பா ஸ்கூலுக்கே வந்தாராம், டீச்சரிடம் பசங்கள ஒழுங்க நடந்துக்கச் சொல்லுங்க, கன்னத்தில் விரல்கள் பதிந்து அவளுக்கு ராத்திரியெல்லாம் ஜுரம், நாளைக்குத் தான் ஸ்கூலுக்கு வருவா' என்று சொல்லிவிட்டு சென்றார் என்று பசங்க சொன்னானுங்க.

டீச்சர் எனது பெற்றோருக்கு சொல்லி அனுப்ப, அடுத்த நாள் பலமான சாத்துப்படி எனக்கு வீட்டில் நடந்தது.

அதன் பிறகு பிரியாவும் நானும் பேசிக் கொள்வது இல்லை.

ஐந்தாம் வகுப்பு முடிந்தும் அவள் அப்பாவுக்கு மாற்றலாகி வேறு எதோ ஊருக்கு சென்றுவிட்டாள். இந்த நிகழ்ச்சி காலேஜ் வரை என்னுடன் படிக்கும் சில நண்பர்களுக்கு தெரியும். அவுனுங்கதான் அடிக்கடி அதைச் சொல்லி சொல்லி என்னை 'சளி மூக்கன்' என்று நிரந்தர பெயர் ஆக்கிவிட்டனர்.

**********

'டோய் என்னடா யோசிக்கிற...?'

'அடப்போடா, நான் அவளுக்கு எப்படி லவ் லெட்டர் கொடுக்கிறதுன்னு யோசிச்சிக் கிட்டே இருக்கிறேன்'

"டேய் மூக்கா, லவ் லெட்டரெல்லாம் பழைய டெரெண்ட், அதை விட்டு விட்டு வேறு எதாவது முயற்சிப் பண்ணு"

ஒரு வாரம் ஆகியது.

வைரமுத்துவின் காதல் பற்றிய கவிதைகள் நினைவுக்கு வந்தது. கண்ணாடி முன் நின்று எனக்குள்ளே சிரித்தேன்.

அன்று சனிக்கிழமை.

எதிர்த்தவீட்டை மாடியில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சீரியஸ் ஆக படிப்பதாக அவ்வப்போது காஃபி, ஸ்னாக் உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. அவளோட அம்மா மட்டும் மதியம் எங்க அம்மாகிட்ட வந்து எதோ பேசிவிட்டு சென்றதாக தெரிந்தது. அம்மாவிடம் 'அவ வீட்டில் தான் இருக்கிறாளா, கேட்கலாமா ... ம் ஹூம் வேண்டாம்... அப்பறம் வழியிரேன்னு நினச்சிடுவாங்க'

மாலை ஆறு மணிக்கு, கீழிருந்து குரல் எனக்கு மாடிக்கு கேட்டது

'செல்வா ! எதிர்த்த வீட்டில் போன் இன்னும் வரலையாம், அந்த அம்மா வந்து சொல்லிட்டுப் போச்சு ....அவுங்க வீட்டுப் பொண்ணு ஒரு போன் பண்ண நம்ம வீட்டுக்கு வரும், நான் பக்கத்து தெரு பிள்ளையார் கோவில் வரைக்கும் போய்டு வந்துவிடுகிறேன், ரொம்ப அசடு வழியாமல் ... நல்ல பிள்ளையாக ... அந்த பொண்ணு வந்தா நடந்துக்க ' என்று சொல்லிவிட்டு அம்மா கிளம்பி விட்டார்

'ஆக சரியான சந்தர்பம், இன்னிக்கு எப்படியாவது அவகிட்ட பேசி ப்ராகெட் போட வேண்டியதுதான், நம்ம வீட்டில் தான் காதல் கல்யாணத்துக்கு எதிர்ப்பு இல்லையே' என நினைத்துக் கொண்டே ... 'என்ன பேசலாம்' என்று பலவாறு சிந்தனையில் இருந்தேன்.

காலிங் பெல் அடித்தது, அதற்காகவே காத்திருந்த எனக்கு கோவில் மணி ஓசையாக கேட்டது. இறங்கி வந்து

கதவை திறந்தேன், சுடிதாரில் அவள்... வெட்கச் சிரிப்பு சிரித்தாள்

'படியும் போல' மனதுக்குள் நினைத்தேன், அடுத்த நொடியில்

"டேய் சளி மூக்கா... என்னைத் தெரியல... நான் தான் உன் கூட ஐந்தாம் வகுப்பு படித்த ப்ரியா' என்று ஒருவிரலைக் காட்டி கையை என்னை நோக்கிக் காட்டி கலகலவென சிரித்தாள்.

ஆச்சிரியத்தில் கண்களை விரித்த எனக்கு சுதாரிப்பதற்குள் நொடிகள் கடந்தது..

என்னைப் பார்த்து சிரித்தது வெட்கச் சிரிப்பல்ல... கேலிச் சிரிப்புதான் என்பதே.... சாமாளித்து அசடு வழிவதற்குள்

பதிலுக்கு காத்திராமல் டெலிபோனை எடுத்து டயல் செய்தவளின் முகத்தில் இன்னும் இருந்தது அந்த கேலிச் சிரிப்பு.

_______/\________

Wednesday, December 06, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் ! (நிறைவு பகுதி)

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

விடாது கருப்பு ... ஆம் ! அவரின் குரல்...என்னிடம் ஏற்கனவே இருமுறை தொடர்பு கொண்டு என்பதிவை பற்றியும், சிங்கை தமிழ்முரசில் வெளிவந்த எனது கவிதையைப் பற்றிக் கருத்துக்கள் கூரிய குரல்தான் ... அதே குரல்.

'ம்.. எஸ்கே ஐயா பக்கத்தில் இருக்கார் ... ம் சொல்லுங்க சதீஷ் ! எப்ப வர்ரீங்க, நாங்க
லிட்டில் இந்தியாவில் வெயிட் பண்ணுகிறோம்'

'கண்ணன் ! அலுவலகத்தில் வேலை அதிகம் வருவது கஷ்டம்'

'பரவாயில்லை, அலுவலகம் முடிந்ததும் சாயங்காலம் 6 மணிக்கு மேல பாப்போமா ?'

'இல்லை கண்ணன், சாயங்காலம் கம்பெணி மீட்டிங் இருக்கு, வரமுடியாது, அவர்கிட்ட சொல்லுங்க'

ஏமாற்றமாக இருந்தது எனக்கு

'ஓகே, சரி அவருக்கிட்டேயே நீங்களே பேசிச் சொல்லிடுங்க' எஸ்கேவிடம் கைத் தொலைபேசியைக் கொடுத்தேன்

அவர் பேசினார். விடாது கருப்பு, எஸ்கேவிடமும் அதையே சொன்னதாக புரிந்தது,

அவரும் 'பரவாயில்லை அடுத்த முறை சந்திக்கிறேன் என்கிறீர்கள், சரி பார்கலாம்' என்று
சொல்லிவிட்டு நன்றி சொல்லிவிட்டு என்னிடம் கொடுத்தார்.

என்னிடம் கருப்பு 'எஸ்கேவையும், அவரது பதிவையும் எனக்கு(தனக்கு) ரொம்ப பிடித்துப் போனதாக அவரிடம் சொல்லுங்கள் என்றார்' அதை அப்படியே அவருடன் பேசிக் கொண்டே ரிபீட் செய்தேன்.

பின்பு 'போன் பண்ணி பேசியதற்கு நன்றி' நான் சொல்ல அவரும் "நன்றி கண்ணன்... அவருக்கும் என் நன்றியை சொல்லிடுங்க" என்பதுடன் அவருடன் தொலைபேசி தொடர்பு முடிந்தது.

பிறகு உடனே வாடகைக் கார் எடுத்து வீடு வந்து சேர்ந்தோம். மாலை 3.30 வீட்டிற்கு வந்ததும், 'உங்களுக்கு மஞ்சள் கலர் பிடிக்குமா ?' என்று கேட்டவர். புதிதாக ஒரு மஞ்சள் அரைக்கை சட்டையை என்னிடம் கொடுத்தார். ஏற்கனவே சோர்வாக இருந்தவர் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். காய்சல் வந்திருந்தது. படுக்கச் சொல்லிவிட்டு போர்வையை நன்கு போர்த்தி விட்டேன். பிறகு தெர்மா மீட்டரை வைத்து அவருக்கு சோதனை செய்து பார்த்ததில் 37.3 டிகிரி டெம்பரேச்சர் காட்டியது. தைலம் கேட்டார். பானடால் கேட்டார். கொடுத்தேன். போட்டுக் கொண்டார். அமிர்தாஞ்சனை கேட்டார். எடுத்துவந்து கொடுத்தேன். தேய்த்துக் கொண்டார். தேய்த்துவிடவா என்றேன். அவர் தயங்குவதற்குள் நானே அமிர்தாஞ்சனை கையில் எடுத்து இரண்டு கைகளாலும் நன்கு சூடுபரக்க தேய்த்து நெற்றியிலும் தோள்களிலும் தேய்த்துவிட்டேன். கால்களை பிடித்துவிட்டேன். தயங்கினாலும் நன்றி பெருக்குடன் பெருமிதமாக என்னைப் பார்த்தார். மருத்துவருக்கே மருத்துவாமா என்று கேட்பதைப் போல் இருந்தது. தூங்கச் சொல்லிவிட்டு நானும் ஓய்வெடுக்கச் சென்றேன். பின்பு எழுந்து

5 மணிக்கு மகளை அழைத்துவர சென்றேன். 10 நிமிடம் தான் பக்கத்தில் இருந்து அழைத்து வரவேண்டும். வந்ததும் மீண்டும் பார்த்தேன் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். தொட்டுப் பார்த்தேன் காய்ச்சல் குறைந்திருந்தது. மாலை 6.30 வாக்கில் என் மனைவி வேலையில் இருந்து திரும்பி வந்தார் வரும் போது வெஜிடேரியன் பீசா பீசாஹட்டிலிருந்து வாங்கி வந்திருந்தார். அவரின் உடல் நிலைப்பற்றி தெரிவித்து இருந்ததால். வந்தவுடன் தேனிர் போட்டு வைத்துவிட்டு அவரை எழுப்பினோம். தேனிரையும் குடிக்கச் சொல்லிவிட்டு, ஒரு துண்டு பீசாவையும் பிடிவாதமாக சாப்பிடச் சொன்னோம். பின்பு என் மனைவி என்னிடம் 'அவரை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவில்லையா ?' என்று கேட்க அவர் பார்க்கவேண்டும் என்று முன்பு சொன்னது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. 'மறந்துட்டேன், இப்போ எல்லோருமே போகலாம், முருகன் கோவிலைப் பார்த்துவிட்டால் போதும், தெம்பாகி கோவில் கோபுரத்தில் கூட ஏறிவிடுவார்' என்று அவரை கிண்டல் செய்ய. சிரித்துக் கொண்டே உடம்பு அசதியை பொருட்படுத்தாது போகலாம் என்றார்.

அப்போது மணி மாலை 7 ஆகி இருந்தது. பக்கத்தில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று விட்டு பின்பு முருகன் கோவிலுக்குச் செல்லாம் என்றேன். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஒரே கல்லிலான விஷ்வரூப ஆஞ்சினேயர் இருக்கும் என்பதால் ஆஞ்சநேயரைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றேன். அரைமணி நேர வாடகைக் கார் பயணம். அந்த கோவிலில் ஆஞ்சநேயருடன், மற்ற சாமிகளும் இருந்தது, ராகவேந்திரா, சத்திய சாய் என எல்லாவற்றையும் தரிசித்தார். உற்சாகம் திரும்பி இருந்தது. பின்பு அங்கிருந்து டோபிகாட்டில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வந்தோம் அங்கு முருகன் தரிசனம். புகைப்படம் எல்லாம் முடிந்தது. இரவு 9 மணி நெருங்கியிருந்தது. அங்கிருந்து லிட்டில் இந்தியாவில் இருக்கும் முஸ்தபா செண்டருக்கு வந்தோம். வாங்கவேண்டியவைகளை ஒவ்வொரு இடமாக நான் காட்ட பொருமையாக பார்த்து பார்த்து வாங்கினார். அவருக்கு நினைவு பரிசாக கொடுக்க ஒரு பஞ்சு தங்கத்திலால் ஆன கண்ணாடி கியூபுக்குள் வைக்கப்பட்ட சிறிய பிள்ளையார் (கார் உள்ளே வைப்பது) வாங்கினோம். முடித்துக் கொண்டு அருகில் இருந்த ஆனந்தபவனுக்குச் சென்று காஃபி மட்டும் குடித்தோம். வெளியில் சாப்பிட்டால் உடல் நலம் மறுபடியும் பாதிக்கும் என்பதால் வீட்டிற்கு சென்று ரசம் செய்து சாப்பிடலாம் என்று வீட்டிற்கு திரும்பி வந்தோம். இரவு 11.30 ஆகி இருந்தது. மனைவி வேகமாக சமையலை முடிக்க நானும் உதவிக்கு மிளகு-தக்காளி ரசம் செய்தேன் , இவரும் ஊருக்குச் செல்வதற்கு முடிச்சுகளை தயார் செய்தார். இரவு 12 மணிக்கு மேல் சாப்பிட்டுவிட்டு, மறுநாள் அதிகாலையில் எழுந்து ஏர்போர்ட் செல்ல வேண்டுமென்பதால் அவரை பானடால் எடுத்துகச் சொல்லி படுக்க வைத்துவிட்டு எல்லோரும் தூங்கி விட்டோம்.

றுநாள் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து, அவரை எழுப்பி தயாராக சொல்லிவிட்டு, அவர் தயாரானதும். ப்ளைட்டில் காலை உணவு தருவார்கள் என்று அவர் சொன்னதால் காஃபி மட்டும் கொடுத்து, எல்லோரும் குடித்துவிட்டு கிளம்பினோம். நாங்கள் மூவரும் கதவுக்கு வெளியில் வந்துவிட்டோம். 'என்ன ஒன்னும் சொல்லாமல் சட்டுன்னு கிளம்பிட்டிங்க ?' என்றவர் ஒரு நிமிடம் வாருங்கள் என்றார். கையில் அமெரிக்க டாலர்கள் இருந்தது. பூஜை அரைக்குச் சென்றவர் டாலர்களை பூஜைதாம்பாளத்தில் வைத்து அருகில் அழைத்தார். தம்பதிகளாக மீண்டும் அவர் காலில் விழுந்து ஆசி பெறவே பணத்தை தாம்பாளத்துடன் கொடுத்தார். நன்றி சொல்லி வாங்கி பூஜை அரையில் வைத்துவிட்டு ஏர்போர்டுக்கு நான்கு பேரும் வாடகைக் காரில் ஏறினோம்.

அவருடன் சேர்ந்திருக்கும் கடைசி மணித்துளிகள் நெகிழ்வாகவே இருந்தது. மனைவியும், குழந்தையும் சிறிது நேரம் பேசிவிட்டு, பின்பு புகைப்படம் எடுத்துவீட்டு 'இந்தியாவுக்கு சொல்லும் போது மறக்காம வந்துட்டு போங்கப்பா' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். நானும் அவரும் உணர்வு வெள்ளத்தில் இருந்தோம். கடைசி நிமிடம். 'எல்லாம் பேசிட்டோம், ரொம்பவே நிறைவாக இருந்தது, உங்கள் குடும்பத்தினருடமும், உங்களுடன் இருந்தது மறக்கமுடியாத நிகழ்வு' என்றார். 'பழகிய ஆறுமாதத்திற்குள் என்னைத் பார்க்க நீங்கள் ஓடோடி வந்தது என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியாத நிகழ்வு, இந்த வயதில் வாழ்கையில் மிகுந்த அனுபமிக்கவராக இருப்பவர் நீங்கள், எது சரி தவறு என்று நிச்சயம் உணர்ந்தே செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அப்படி நான் நினைக்கும் போது உங்களுக்கென்றே அன்பு செலுத்தி அரவணைக்க நூற்றுக்கணக்கான உறவினர்கள், நண்பர்கள், உண்டு, பாசமுடன் பழக பெற்ற பிள்ளைகள் உண்டு, இவையெல்லாம் இருந்தும் எனது அன்பையும் உயர்வாக நினைத்து அமெரிக்காவில் இருந்து நேராக சென்னைக்கு மட்டுமே சென்று திரும்ப வேண்டியவர் நீங்கள் ... என்னையும் என் குடும்பத்தையும் பார்க்க மட்டுமே தனிப் பயணமாக சென்னையிலிருந்து சிங்கபூர் வந்து சந்தித்ததை என்னால் மிகச் சதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, தங்கள் அன்பிற்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன்' என்றேன். அதன் பிறகு பேச்சு எழுவில்லை. கையை இருக பற்றிக் கொண்டார், கட்டி அணைத்துக் கொண்டார். விடைபெற்று உள்ளே செல்லும் இடத்திற்கு சென்றோம். பயனச்சீட்டை காவலர் சரி பார்த்து முடித்து அவர் கையில் திரும்ப கொடுத்தார், அருகில் தான் நின்று கொண்டிருந்தேன். எஸ்கே திரும்பி மறுபடியும் நெகிழ்வுடன் பார்த்தார் அந்த நொடியில் திரும்பவும் நான் அவரைக் கட்டிக் கொள்ள, கன்னத்தில் முத்தமிட்டார், உடனிடியாக நானும் முத்தமிட விடை கொடுத்துக் கொண்டோம்... உணர்வுகள் மனதை அழுத்த காவலரைக் கடந்து சென்றார். பார்த்துக் கொண்டிருந்தேன். 'நீங்கள் செல்லுங்கள், நீங்கள் சென்றால் தான் நான் உள்ளே செல்வேன்' என்றார். பை பை சொல்லிவிட்டு கண்ணுக்கு மறையும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றேன். அன்று அணிந்திருந்த சிவப்பு டீ சர்ட்டுடன் இருந்த அவரது உருவம் அன்று முழுவதும் கண்ணுக்குள் இருந்தது.

உறவினர்கள் விடைபெறும் போது, திரும்பவம் என்றாவது எதோ நிகழ்ச்சி, வைபவங்களில் நிச்சயம் அவர்களைப் பார்க்க முடியும். நண்பர்கள் பிரியும் போது அடுத்த சந்திப்பு எப்போது
என்று தெரியாது என்பதால் பிரிவின் போது எதையோ இழந்தது போன்று மனம் கனத்தது. இருந்தாலும். அன்பை முழுதுமாக இருவரும் வெளிப்படுத்திக் கொண்ட நினைவுகள், திரும்பவும் இவை நிகழும் என்று நினைத்து ஆறுதலடைய வைத்தது.

சக பதிவராக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தொலைபேசியில் பேச தொடங்கியபோது நட்பு என்று மாறியது. பின்பு குடும்பங்களைப் பற்றி பேசிப் பகிர்ந்ததில் உறவாக மாறியது. நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றார், வந்தார், இதுவரை முன் எப்போதும் பார்காத ஒருவரிடம் நமக்கு பொதுவாக இருக்கும் சங்கோஜ உணர்வு ஒரு துளிகூட இருவருக்கும் இல்லை. பலவருடங்களாக பழகியவர்கள் போல் மிகுந்த நெருக்கம் உள்ளவர்களாகத்தான் இருவருமே உணர்ந்தோம். நேரில் பார்த்து நெகிழ்ந்த போது உறவும் உன்னதம் ஆகியது.அவர் என்னுடன் இருந்த போதும், அதற்கு முன்பும், இன்றும், நானும் என் மனைவியும் அவருடன் பேசும் போது தனிப்பட்ட முறையில் அவரை அன்புடன் நாங்கள் உணர்ந்தே அழைப்பது 'அப்பா' என்ற உறவின் பெயரால்.

பின்குறிப்பு : இந்த தொடரை தொடர்ந்து படித்து பாராட்டிய சக நண்பர்களுக்கும், இதை தொடராக மகிழ்வுடன் எழுதி பதித்திக் கொள்ள காரணமாக இருந்த மருத்துவர் எஸ்கே ஐயா வுக்கும் நன்றி.

Tuesday, December 05, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

அக்குறும்பு ! (தே.கூ டிசம்பர் மாத போட்டி):

அன்று மகனின் உடைகளை துவைக்கப் போடும் போது பாக்கெட்டில் சிகரெட் தூள்கள். அதிர்ந்தாள்

'என் பையனுக்கா சிகெரெட் பழக்கம் ?' நம்ப முடியாதவாளாக யோசித்துக் கொண்டிருந்தாள்

நம்ம குடும்பத்தில் யாரும் புகைப்பிடிப்பவர்களே இல்லையே, இவனுக்கு எப்படி அதுவும் காலேஜ் பைனல் இயர் படிக்கிற பையன் படிப்பில் கவனத்தை சிதறவிட்டுவிடுவானோ ? என்று நினைத்தவளாக,

சரி இப்போதைக்கு விட்டுவிடுவோம், இது தொடர்ந்தால் கணவரிடம் சொல்ல வேண்டியதுதான் என்று நினைத்தபடி பெரிது படுத்தாமல் விட்டுவிட்டாள்.

மற்றொருநாள்,
இரவு 1 மணி வரைக்கும் வராதவன் பின் பூனைபோல் வீட்டிற்கு வந்தவன் சாப்பாடு எதும் வேண்டாமென்று சட்டென்று மாடிக்கு சென்று படுத்துவிட்டான்,

மறுநாள் காலையில்

"அம்மா, காஃபி கொடேன் ... ஒரே தலைவலி" என்று அருகில் வந்து சொன்னவனிடமிருந்து எஞ்சியிருந்த மதுவாடை நேற்றய தாமத வருகையை சொல்லாமல் சொன்னது

சற்று அதிர்ந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் காஃபி எடுத்து வந்து தருவதாக சொல்லி சென்றுவிட்டாள்.

அதிர்ச்சியை வெளிக்காட்டாதவாறு அவரிடம் சொல்லி கண்டிக்கச் சொல்லனும், என்று நினைத்தவள்... அன்று மாலை அவன் வீடு திரும்பும் முன் கணவரிடம் சொல்ல ஆரம்பித்தாள்

"என்னங்க, உங்க பையனுக்கு புது புது வேண்டாத பழக்கமெல்லாம் வந்திருக்கு"

சற்றென்று நிமிர்ந்தபடி கேட்டார் கணவர்

"என்னம்மா சொல்ற, நம்ம பையனுக்கா ?"

"ஆமாங்க, அன்னிக்கு பாக்கெட்டில் சிகெரெட் தூள்கள் இருந்தது, அனேகமாக புகைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டான் என்று நினைக்கிறேன்"

"ஹூம்" என்று பெருமூச்சி விட்டார்

"அப்பறம் நண்பரோட அக்கா கல்யாணத்துக்குப் போனவன், நேற்று இரவு தண்ணி அடிச்சிட்டு வந்துருப்பான் போல், காலையில் வாயிலிருந்து மது வாடை"

"ஹூம் ... அதுவேறயா ?" ஆழமாக பெருமூச்சி விட்டார்

"நீங்க தான் என்ன ஏதுன்னு கேட்கனும், எனக்கு இதெல்லாம் நேர முகத்தைப் பார்த்து கேட்க என்னவோ போல இருக்கு, இந்த வருசம் அவன் காலேஜ் நல்ல படியாக முடிக்கனும் அதான் கவலையாக இருக்கு "

"சரி கவலைப்படாதே, அவன் வரட்டும் விசாரிக்கிறேன்"

அவன் வந்தான், சிறிது நேரம் கழித்து அவனை அருகில் அழைத்தார்.

"தம்பி, எதோ புது கெட்டப் பழக்கம் எல்லாம் வந்திருக்காமே"

தலையை தொங்கப்போட்டுக் கொண்டான்

""
"இந்த வயசில பசங்க செய்கிறதுதான், ஆனால் அளவோடு நிறுத்திக்கனும்"

""

"அதுக்காக அப்பாவே பர்மிசன் கொடுத்துட்டார் என்று ஆட்டம் போட்டால் உன் எதிர்காலம் தான் பாதிக்கும், நீ அறிவுள்ளவன் நல்லா படிக்கிறவன் புரியும் என்று நினைக்கிறேன்"

தயக்கமாக

"புரியுதுப்பா" என்று அவரை கட்டிக் கொண்டான்

அதன் பிறகு அவன் மேலே சென்றதும் அதற்கெனவே காத்திருந்து போல்

"என்னங்க பையனை கண்டிக்கிறேன் என்று சொல்லிட்டு..." நிறுத்துவதற்குள்

"பாரும்மா, நாம ரொம்ப கண்டிப்பாக இருந்தால், நாம இல்லாத போது அதை மீற வேண்டும் என்ற எண்ணமே இந்த வயசு பசங்களுக்கு ஏற்படும்"

"என்னமோ சொல்லுங்க"

"முதலில் சந்தர்பம் கிடைக்கும் போது தப்பு பண்ணுவார்கள், ரொம்ப ப்ரசர் கொடுத்தால் அப்பறம் சந்தர்பம் கிடைத்தால் மிஸ் பண்ணாமல் அதையே செய்வார்கள்"

""

"ரொம்ப கண்டிச்சா பழக்கம் அதிகம் ஆகிடும், இல்லையென்றால் மன உளைச்சல் அதிகமாகிடும்"

"ஹூம்"

"கவலைப்படாதே, நானும் இப்படித்தான் இருந்தேன் ... பொறுப்பை உணர்ந்தால் எந்த கெட்டப் பழக்கமும் தொடராது... சொல்லி இருக்கிறேன்"

""

"வாலிப வயசில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் இருக்கும், அதைத்தான் அவன் செய்திருக்கிறான்"

"உங்கள மாதிரின்னு நீங்களே சொல்லிட்டிங்க... ஹூம் இனி நான் என்னத்தச் சொல்ல ..."

"பெற்றவர்கள் நாம் தான் எடுத்துச் சொல்லி அளவோடு இருக்கச் சொல்லனும், அதுக்காக கூட உட்கார்ந்து ஊற்றிக் கொடுப்பதும், நெருப்பு பற்றவைத்து விடுவதும் தவறு"

மறுபடியும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் இருவரும் மவுனமாகி அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

பின்குறிப்பு : என்ன அக்குறும்பா இருக்கு கதையில்(?) 'குறும்பையே' காணுமே ?
ஹலோ ! காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?
:):)

Monday, December 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 4) !

நேரில் வந்து சந்தித்த பதிவர் பகுதி 1 பகுதி 2 பகுதி 3

ற்கனவே புகைப்படம் கட்டுமாணத்துறை வலைப்பதிவில் பார்த்து இருந்ததால் சாலைக்கு அந்த பக்க்கம் இருந்தே இவர்தான் 'வடுவூர் குமார்' என்று கண்டுகொண்டேன். சாலையைக் கடந்து அருகில் சென்றோம். நானும் எஸ்கேவும் வடுவூர் குமாரை அதிக நேரம் முழிக்கவிடாமல் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். வடூவூரார் 6 அடியோ அல்லது அதற்கு மேலோ நல்ல உயரம். கூடவே இருந்த வடுவூராரின் நண்பர் விடைபெறவே, நாங்கள் மூவரும் பக்கத்தில் இருந்த ஆனந்த பவன் உணவகத்துக்குள் நுழைந்தோம். வடுவூரார் சற்றுமுன்பு தான் சாப்பிட்டதாக சொல்ல நானும் எஸ்கேவும் காஃபி மட்டும் சாப்பிட்டோம்.

வடுவூரார் தனைப்பற்றியும் தன் குடும்பம் பற்றி குறிப்பிட்டார் ... கூடவே வேறு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பதாக சொன்னார். மூவரின் வலைப்பதிவுகளை பற்றி சிறிது நேரம் பேச்சு நடந்தது. மூவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டவுடன் அந்த அரை மணிக்கும் குறைவான சந்திப்பு முடிவுக்கு வர ... விடை பெற்றோம். அதன்பிறகு பாபா படம் அன்று மாலையோ அல்லது மறுநாளோ தருவதாக சொன்ன Tushiv கடைக்குச் சென்றோம் மணி இரவு 8.30 தாண்டி இருந்ததால் கடை மூடி இருந்தது... அங்கிருந்து சற்று தொலைவில் இருந்த முஸ்தபா செண்டருக்கு சென்றோம். அந்த கடையின் அளவும், மலை போல் இருந்த விற்பனைப் பொருள்களையும் பார்த்த எஸ்கே பிரமாண்டமாக இருப்பதாக சொன்னார். அன்று பொருள்கள் எதுவும் வாங்கவில்லை. மறுநாள் அங்கு வர இருப்பதால் மறுநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்க வேண்டிய பொருள்களின் இருப்பிடத்தை மட்டும் பார்த்து வைத்துக் கொண்டு வெளியில் வந்தோம். அருகில் இருந்த ஆனந்த பவனுக்குள் நுழைந்து எதாவது டிபன் சாப்பிடலாம் என்று நுழைந்தோம், பின்பு வீட்டில் உணவு இருக்கும் என்பதால் பாகற்காய் சிப்ஸ் பாக்கெட் ஒன்றும் காஃபி ஆர்டர் செய்துவிட்டு, பாகற்காய் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிக் கொண்டோம். வெளியில் வந்ததும் தான் தெரிந்தது காஃபியை ஆர்டர் பண்ணி, வாங்கிக் குடிக்காமல் ஞாபக மறதியாக வெளியில் வந்ததோம் என்பதே.


பிறகு வாடகைக் கார் பயணம் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்ததும் தயிர்சாதம், ரசம், சாம்பார் சாப்பாடு முடிந்தது. பின்பு சிறிது தரையில் எல்லோரும் அமர்ந்து நேரம் என்மகள், மனைவி, எஸ்கே முவரும் பரமபதம் போன்று ஒரு விளையாட்டை விளையாட... எனது 6 வயது மகள் இருவரையும் நன்றாக ஏமாற்றி.. அவளுக்கு சாதகமாக விதிகளை மாற்றி மாற்றி ஆட... நான் ரசித்தபடி அவரது மடியில் தலை வைத்தபடி படுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன் தூக்கம் நெருக்கவே... பிறகு எல்லோரும் தூங்கச் சென்றோம். எஸ்கே இரவு 3 மணிவரை நா.முத்துக் குமாரின் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததாக மறுநாள் சொன்னார்.

மறுநாள் 8 மணி வாக்கில் அவர் எழும் முன்பே மனைவி வேலைக்கும், மகள் பள்ளிக் கூடத்துக்கும் சென்று விட்டனர். காலை 9.00 மணி வாக்கில் எழுந்தேன். அவரை எழுப்புவதற்கு சென்ற போது அவர் ஏற்கனவே எழுந்து குளியல் அறைக்கு சென்றிருந்தார். குளித்துவிட்டு வந்தார், நானும் குளித்துவிட்டு, அவருக்கு காலை சாப்பாடாக காரச்சட்டினியுடன் ஆனியன் ஊத்தப்பம் செய்தேன். சாமி கும்பிட்டுவிட்டு வந்தார். ஊத்தப்ப அளவைப் பார்த்ததும் ஒன்றே போதும் என்றார். காலை சாப்பாட்டை முடித்ததும் கனனி முன்பு உட்கார்ந்தோம். அப்பொழுது தான் நினைவு வந்தது. அதாவது சிவபாலன் பதிவு வழியாக நான் எஸ்கேவின் சிங்கை வருகையை வெளியிட்டு இருந்தேன். அதில் விடாது கருப்பு தனக்கும் எஸ்கேவை சந்திக்க விருப்பம் இருப்பதாக சொல்லி இருந்தார். ஒருவேளை அவர் முதல்நாள் எங்கள் தொலைபேசி தண்ணீரில் விழுந்ததால் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட அந்த இடைப்பட்ட அந்த நேரத்தில் எங்களை சந்திக்க முயன்று அவரால் (கருப்பு) தொடர்பு கொள்ளாமல் போய் இருக்குமோ என்று நினைத்தோம். மின் அஞ்சலை திறந்ததும் கருப்பு எனது மின் அஞ்சல் முகவரிக்கு 'எஸ்கே வந்தாரா' என்று கேட்டு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். ஆனால் அவரை தொடர்பு கொண்டு கேட்பதற்கு அவரது தொலைபேசி தொடர்பு எண்கள் எங்களிடம் இல்லை. எனவே அவரது மின் அஞ்சல் அனுப்பி திரும்பவவும் இன்று தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் லிட்டில் இந்தியாவில் இருப்போம் சாயங்காலம் சந்திக்க முடிந்தால் நேரில் வாருங்கள் என்று மின் அஞ்சல் அனுப்பிவிட்டு, அன்றைக்கு சிங்கப்பூரில் சில இடங்களை பார்கலாம் என்று இருவரும் வீட்டை விட்டு கிளம்பினோம். அப்போது எனது அலுவலகத்திலிருந்து சிஸ்டம் நெட்வொர்க் பிரச்சனைப் பண்ணுவதாக தொலைபேசினார்கள். எனவே அவரையும் அழைத்துக் கொண்டு எனது அலுவலகம் சென்றேன். வேலை 5 நிமிடத்தில் முடிந்தது. எனது அலுவலக அறையை காட்டிவிட்டு அங்கிருந்து சிங்கப்பூர் பொது பேருந்தில் ஏறி தோபாயோ என்ற எம்ஆர்டி நிலையத்தை வந்தடைந்தோம்.

மணி மதியம் 12.30 ஆகி இருந்தது அங்கிருந்து எம்ஆர்டி ரயில் வழியாக கடைசி நிலையமான மரீனா பே க்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பார்த்தால் சிங்கபூரின் உயர கட்டிடங்களின் அணிவகுப்பு அழகாக தெரியும், புகைப்படம் எடுக்க ஏற்ற இடம். மூன்று புகைப்படங்களை சுட்டுவிட்டு அங்கிருந்து ராபிள்ஸ் ப்ளேஸ் என்ற வியாபார மையங்கள் உள்ள இடத்திற்கு வந்தோம். அங்கும் புகைப்படங்கள் எடுத்தோம். மணி நண்பகல் 1.45 ஆகி இருந்தது. அங்கு சில இடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பசியெடுக்கவே அங்கிருந்த சரவணபவன் ஞாபகம் வர அங்கு சொல்லலாம் சரவணபவன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அப்போது மிகவும் தளர்ந்து காணப்பட்டார், உற்சாகம் குன்றி இருந்தது. நலம் குறித்து கேட்டேன். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தார். சரவணபவனை அடைந்தோம். அவர் தயிர்சாதம் மட்டும் போதும் என்றார் பிறகு ரசவடையும் சேர்த்து வாங்கினோம். எனக்கு விரைவு உணவு (குயுக் லஞ்ச்) வாங்கிக் கொண்டேன். ரசவடையும், குயுக் லஞ்சில் இருந்த கேசரியையும் பகிர்ந்து உண்டோம். பின்பு வெளியில் வந்தோம். எதிரில் இருந்தது ஜெட் ஏர்வேஸ் அலுவலகம், அங்கு சொன்று மறுநாள் சென்னை திரும்புவதற்கான பயணச்சீட்டை மறு உறுதிப்படுத்திவிட்டு வெளியில் வந்தோம். எஸ்கே ஐயா மிகுந்த சோர்வாக காணப்பட்டார். மணி மாலை 2.30க்கு மேல் ஆகி இருந்தது இதற்கு மேல் எங்கும் அழைய முடியாது எனவே லிட்டில் இந்தியா சென்று பாபா படத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்து வாடகைக் கார் பிடித்து லிட்டில் இந்தியா வந்து பாபா படத்தை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம்.

எனது கைத் தொலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தேன் "unknown" நம்பர் caller id யில் தெரிந்தது. பேசும் பட்டனை அழுத்தி 'ஹலோ' என்றேன் மறுமுனையில் 'ஹலோ கோவி.கண்ணன் ...? நான் சதீஷ் பேசுகிறேன், எஸ்கே பக்கத்தில் உங்களுடன் இருக்காரா ?' - தொலைபேசியில் விடாது கருப்பு ....

உரையாடல் அடுத்த பகுதியில் தொடரும் ....

Friday, December 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 3)

முந்தைய பகுதிகள்...
நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 1)
நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 2)

செந்தோசா தீவில் உள்ளே நுழையும் போது பிற்பகல் 2.45 ஆகியது. சுற்றுலா வழிகாட்டி மாலை 3.15க்கு அழைத்துச் செல்வதாக வரேவேற்பு அறையில் தெரிவித்தார்கள். 45 நிமிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். அங்கு அருகில் இந்தியர் ஒருவர் மலைப்பாம்பு வைத்துக் கொண்டு அதனுடன் புகைப்படம் எடுக்க 5 வெள்ளிகள் பலகை எழுதி வைத்திருந்தார். அங்கு புகைப்டம் எடுக்க அதிகம் யாரும் வரவில்லை. அந்த பாம்புகாரரிடம் சென்று எஸ்கே பாம்பை வெளியில் காட்ட 50 காசுகள் என்று சொன்னால் உங்களுக்கு அதிக சில்லரை தேறும் என்று யோசனை தெரிவித்தார். குறிப்பிட்ட நேரம் வரவே சுற்றுலா பேருந்து வரவே ஏறி உட்கார்ந்தோம கூடவே ஒரு 30 பேர் பயணித்தனர். அதில் வந்த வழிகாட்டி நல்ல நகைச்சுவையாக பேசினார். பேருந்து மூலம் நாங்கள் முதலில் செல்ல வேண்டிய இடம். ஆழ் நீர் உலகம் (அண்டர் வாட்டர் வேர்ல்ட்). வழிகாட்டி மீன்களை கையால் தொட்டு பார்க்க ஒரு முகப்பில் ஒரு தொட்டி இருக்கிறது அதில் பலவித மீன்கள் இருக்கும் தொட்டுபார்பவர்கள் தொட்டுப்பார்கலாம் என்றார்.

அண்டர் வாட்டர் வேர்ல்ட் உள்ளே நுழைந்ததும் ஆவல் அதிகரித்து நான் நீர் தொட்டியில் கையை நுழைக்க, கலுத்தில் தொங்கிக் கொண்டிருந்த எனது செல் போனுக்கும் அந்த ஆசைவர நீரில் உள்ளே இறங்கி சட்டென்று சத்தமில்லாமல் உயிர்விட்டது. தொலைபேசி வழி தொடர்புகளின் எண்கள் எல்லாம் திடீரென்று காணமல் போய்விட்டது. வடுவூர் குமாருடன் எப்படி மாலை எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து செல்போனை எவ்வளவோ தரிகனத்தோம் போட்டும் அது ஒரு ரிங் டோனைக் கூட காட்டவில்லை. ஹூம் என்று பெருமூச்சி விட்டபடி மீன் அருங்காட்சியகத்தில் பலவித மீன்களின் அழகை ரசித்தோம், புகைப்படம் எடுத்தோம். அனைவரும் பார்க்கவேண்டிய காட்சிகள் அவை. கடலுக்குள் இருக்கும் அத்தனை மீன் வகைகளும் கண்ணாடியில் நம் தலைக்கு மேல் நீந்திச் சென்றது.

மீன் அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு பக்கத்தில் கடற்கரைக்கு சென்று அருகில் வாலிபால் விளையாடும் பீச் பாய்ஸ் / கேர்ள்சை பார்த்துவிட்டு வரவும் அடுத்த இடத்துக்கு செல்ல பேருந்து தயாராக இருக்கவும் சரியாக இருந்தது. அடுத்து நாங்கள் சென்ற இடம் டால்பின் லகூன் எனப்படும் டால்பின்கள் செய்யும் சாகச காட்சிகளுக்கான இடம். உள்ளே சென்று 15 நிமிட காத்திருத்தலுக்கு பிறகு அழகான பிங் டால்பின்கள் துள்ளிக் குத்தித்து காட்சி கொடுத்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி அசத்தியது. அதுவும் ஒரு 30 நிமிட நிகழ்ச்சிதான். அது முடிந்ததும் அதே பேருந்தில் சினிமேனியா என்ற வெர்சுவல் ரியாலிட்டி காட்சி அரங்குக்குக்கு கூட்டி செல்லப்பட்டோம். திரையில் காட்சிகளுக்குள் நாம் பயணம் செய்வது போன்ற நல்ல அனுபவம் கிடைத்தது. மாலை 6.30 ஆகிவிட்டது.

இன்னும் பார்க்க இடங்கள் இருந்தாலும் மாலை சந்திப்பதாக தெரிவித்த வடுவூர் குமாரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதால் தீவை விட்டு வெளியில் செல்ல முடிவெடுத்து பேருந்தில் ஏறி தீவின் இழுவை கார் முகப்புக்கு மறுபடியும் வந்துவிட்டோம். மங்கிய மாலை அதில் விளக்குகள் ஒளிர ஆகாயத்தில் அழகான ஊஞ்சல் ஆடுவது போல் இழுவை கார் (கேபிள் கார்) பயணம முடிந்து தீவைவிட்டு வெளியில் வந்தோம். அங்கிருந்து மறுபடியும் லிட்டில் இந்தியா வந்து சேர மாலை 7.15 ஆகி இருந்தது. அங்கே இருந்த சிங் கடை ( சிங் கடை அதைப்பற்றி பிறகு எப்போதாவது சொல்கிறேன்) புது கை தொலைபேசி வாங்கி சிம் கார்டை இணைத்தேன். கை தொலைபேசியை உயிர் ஊட்டியதும் எதிர்பார்த்த படி இடையில் அனுப்பிய வடுவூர் குமாரின் குறுந்தகவல் முதலில் வந்தது. உடனடியாக அவரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அருகில் தான் இருப்பதாகவும் சந்திக்க காத்திருப்பதாகவும் சொன்னார்.


அவரை சந்திக்கச் செல்லும் வழியில் மாரியம்மன் கோவில் வர உள்ளே நுழைந்து சம்பிரதாய சாமி கும்பிட்டுவிட்டு உடனே குமார் வரச் சொன்ன இடத்துக்குச் சென்றோம். அவர் அங்கு இல்லை. கை தொலைபேசியில் திரும்பவும் தொடர்பு கொண்டேன் சாலைக்கு எதிர்பக்கம் இருப்பதாக சொன்னார்.

பதிவின் நீளம் காரணமாக அடுத்த பதிவில் வடுவூர் குமார் சந்திப்பு, அடுத்த நாள் விடாது கருப்பை எப்படி தொடர்பு கொண்டு அவருடன் பேசினோம் ? ஏன் தொடர்பு கொண்டோம், நானும் எஸ்கேவும் விடாதுகருப்பு விடம் என்ன பேசினோம் ? என்பதை சொல்கிறேன்.