Wednesday, April 23, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

பூவின் மவுனம் !


பூவின் வாசமோ, வண்ணமோ
எதோ ஒரு ஈர்ப்பில்
பார்த்துக் கொண்டு இருந்த
என்னை அழைத்தது அருகில்,

எல்லாப் பூக்களைப் போலத்தான்
இந்த பூவும் நன்றாக இருக்கிறதே
ஒட்டி உறவாடினேன்
அந்த ரோஜாவுடன் !

நெருங்கிப் பழகியதாலோ என்னவோ
உரிமை எடுத்துக் கொண்டு,
என்னிடம் பழகும் நீ
ஏன் காட்டுப்பூக்களிடம்
பழகுகுறாய் என்று கடிந்து
கொண்டது ரோஜா.

பூவெல்லாமே எனக்கு ஒன்றுதான் !
நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும்,
என்னைவிட அந்தபூக்கள்
என்ன உயர்வு உனக்கு ?
கடிந்து கொண்டது ரோஜா !

மீண்டும் சொன்னேன்,
பூக்களெல்லாமே பூக்களே
எந்த பூவும் என்னிடம் பேசினால்
நானும் பேசுவேன் !

நீ பூவென்று நினைப்பது பூவல்ல
பூநாகம், நீ தொடர்ந்து
பழகினால், உன் கூடா ஒழுக்கமாக
உன்னை வெறுப்பதைத் தவிர எனக்கு
வழி இல்லை என்று சொன்னதுமின்றி
முட்களால் என்னைத் தீண்டிவிட்டு மவுனமானது !

வருடிக் கொடுக்கும்
என் விரலில் தீண்டினாலும்
இதயத்தில் தீண்டியதாகவே உணர்ந்தேன்.
நீ மட்டும் என்ன ? நீயும் முட்களால் தீண்டி
காட்டு ரோஜாதான் என காட்டிவிட்டாயே !

அன்பு ரோஜாவே,
பூவில் பூநாகம் இருப்பதெல்லாம் எனக்கு
தெரியாது, என்னைப் பொருத்து
அது நாகலிங்கப் பூதான்,
அந்த பூமட்டுமல்ல,
எந்த பூவும் என்னுடன் பழகினால்
நான் பழகுவேன் !
உன்னுடன் மட்டும் பழகி,
நீ சொல்வதை மட்டும் கேட்கவேண்டும் ?
நீ நினைப்பதை என்னால் நிறைவேற்ற முடியாது !

உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை,
என்னைத் தீண்டியதில் உதிர்ந்துவிட்ட
உன்முட்களால் ஏற்பட்ட காயம்
உனக்கு வலிக்குமே...
அதற்க்காக நானும் கூட வருந்துகிறேன்.

என்றோ ஒருநாள்,
பூந்தோட்டத்தில் எல்லாப்பூக்களுடன்
நீயும் இருக்க வேண்டும்,
அன்று என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !