Wednesday, September 13, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பிம்பம்...! (கவிதை)


எதோ ஒன்றை சாதித்தற்காக
குரூரப் புன்னகையுடன்
கண்ணாடி முன் நின்றேன் !

பிம்பம் வாய்விட்டு சிரித்தது !
திடுக்கிட்ட நான் கேட்டேன்,
என்ன சிரிக்கிறாய் ?
நான் செய்தது சாதனை இல்லையா ?

கேலியாக மெல்லச் சிரித்தது,
நீ செய்தது சாதனை அல்ல
உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வது !

என்ன சொல்கிறாய்,
எனக்கொன்றும் புரியவில்லை ?
நல்லவன் போல் வேடமிட்டு
உள்ளுக்குள் ஒன்றும், வெளியில் வேறாக
நீ செய்த காரியத்தில்
உனக்கு மகிழ்ச்சியா ?

அதிர்ந்து போனேன் நான் !
இது எப்படித் தெரியும் உனக்கு ?
உன்னுடனே இருக்கும் எனக்கு தெரியாதா
உன் மனது ?
என்னையும் ஏமாற்ற முயலாதே !
என்றது பிம்பம் !

தலைகுனிந்தேன் நான் !
என்னை நிமிர்ந்து பார்க்கச் சொல்லி
முகத்துக்கு நேராக சொன்னது,
நல்லவன் போல் வேடமிட்டு,
நல்லகாரியம் செய்வதுபோல்
காட்டிக் கொள்ளும் நீ,
உண்மையிலேயே நல்லவனாக மாறினால்
செய்வது என்றுமே நல்லகாரியமாக இருக்குமே,
உன் குரூர புன்னகைக்கு பதில்
மனதில் நிறைவான மகிழ்ச்சி இருக்குமே !

கேட்டுவிட்டு அமைதியானேன் நான்,
பிம்பம் என்னுள் கலந்துவிட்டது,
மனது நிறைவதை உணர்ந்தேன் !

10 : கருத்துக்கள்:

said...

// நல்லவன் போல் வேடமிட்டு
உள்ளுக்குள் ஒன்றும், வெளியில் வேறாக
நீ செய்த காரியத்தில்
உனக்கு மகிழ்ச்சியா ? //

அதை பிம்பம் சொன்னா கேட்டுக்கிறீங்க!
வாத்தியார் சொன்னா புன்னகைக்கிறீங்க!

அந்தப் ப்டம் நல்ல இருக்கு மிஸ்டர் ஜி.கே
அது மாதிரி ஒரு ஆறேழு படம் கிடைச்சா போதும்
ஒரு பதிவு போட்டு நமம கண்மணிகளையெல்லாம் ஒரு மிரட்டி மிரட்டிப் பார்த்திருவேன்

said...

:(

said...

மனநிறைவான செயல்களே நமக்கு எப்போதும் மகிழ்ச்சியை தரும்..

அந்த மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும் என்பதை வித்தியாசமாக சொல்லியிருகிறீர்கள்

நாம் செய்யும் சில அர்த்தமற்ற செயல்கள் நம் உள் மனதுக்கு தெரிந்து இருந்தும் தெரியாதது போல் நாம் நாடகமாடுகிறோம்...

( இந்த புரிதல் சரியா?)

மங்கை

said...

// SP.VR.SUBBIAH said...

அதை பிம்பம் சொன்னா கேட்டுக்கிறீங்க!
வாத்தியார் சொன்னா புன்னகைக்கிறீங்க!

அந்தப் ப்டம் நல்ல இருக்கு மிஸ்டர் ஜி.கே
அது மாதிரி ஒரு ஆறேழு படம் கிடைச்சா போதும்
ஒரு பதிவு போட்டு நமம கண்மணிகளையெல்லாம் ஒரு மிரட்டி மிரட்டிப் பார்த்திருவேன்
//

ஐயா ...!
உங்க மாணவன் ஆன பின்பு மிஸ்டர் என்று குறிப்பிட வேண்டாம். ஜிகே ன்னு போடுங்க போதும்.

வாத்தியார் சொன்னா கேட்டுக்குவாங்க... சரியாக பசங்க தூங்கும் நேரத்தில் சொல்லவேண்டும் !
:))

என்னது என்னோட கிளாஸ்மெட்டை மிரட்டுவதற்கு நான் துணை போகனுமா ?
:)))

said...

//மகேந்திரன்.பெ said...
:(
//

மகி ... !
என்ன மர்மப் புன்னகையோடு நிறுத்திட்டிங்க...!
பிம்பம் உங்களுக்கும் தெரிஞ்சுதா ?
:))

said...

//மங்கை said...
மனநிறைவான செயல்களே நமக்கு எப்போதும் மகிழ்ச்சியை தரும்..

அந்த மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும் என்பதை வித்தியாசமாக சொல்லியிருகிறீர்கள்

நாம் செய்யும் சில அர்த்தமற்ற செயல்கள் நம் உள் மனதுக்கு தெரிந்து இருந்தும் தெரியாதது போல் நாம் நாடகமாடுகிறோம்...

( இந்த புரிதல் சரியா?)

மங்கை
//

மங்கை அவர்களே ...!
நீங்கள் புரிந்துகொண்டது மிகச் சரி...!

எல்லோரும் மாயப் புகழடைய சில சமயம் நல்லவர் போல் வேசமிடுகிறோம். நிறந்தரமாக நல்லவராக இருந்தால் உண்மையான மன நிறைவு இருக்கும் என்று தான் சொல்ல முயன்றேன் நான் !

said...

"நன்றும் தீதும் பிறர் தர வாரா" [பரிபாடல்]
நல்லதும் கெட்டதும் நாமே விதிப்பது
நல்லவன் என்பதே உண்மையும் பொய்யும்
ஒன்றாய்ச் சேர்ந்த கலவையன்றோ!

நல்லது எனவே நாம் நினைப்பது
நல்லதாகத் தோன்றாமலும் போகும்
அல்லது என்பதும் அப்படியே
அவரவர் மனசாட்சி ஒன்றே சாட்சி!

"மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு" [வாலி]

அன்றே சொன்னார் நம் வாத்தியாரும்
இன்றும் சொல்கிறார் ஒரு 'வாத்தியார்'!
அவரவர் செய்வது அவரவர்க்கு நல்லது
அடுத்தவர் செய்வது அனைத்தும் தீயது

என்றிங்கு வாழ்ந்திடும் மனிதர் இருக்கும்வரை
ஒன்றாய் வாழ்ந்து உருப்படுவது எங்ஙனம்?
மனம் நிறைகையில் மகிழ்வாய்ச் சிரிப்போம்
அது நோகையிலோ அடுத்தவரை நைப்போம்

இதுதானே இங்கு நாம் காண்பது?
அதுதானே வாழ்வாகிப் போனது?
மனத்துக்கண் மாசிலனாய் வாழ்ந்தால் போதும்
மன நிறைவும் அங்கு தானே தேடிவரும்!

said...

//அவரவர் செய்வது அவரவர்க்கு நல்லது
அடுத்தவர் செய்வது அனைத்தும் தீயது

என்றிங்கு வாழ்ந்திடும் மனிதர் இருக்கும்வரை
ஒன்றாய் வாழ்ந்து உருப்படுவது எங்ஙனம்?
//
எஸ்கே ஐயா ...!
பின்னூட்ட கவிதை நன்றாக பொருள்பட இருக்கிறது.

மேலே சொன்ன வரிகள் மட்டும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. ஒட்டவில்லை...!

இங்கு நான் மனதையும், மனசாட்சியையும் மட்டும்
வைத்து எழுதினேன். நீங்கள் அதைத் தாண்டி வெளியில் உள்ள (மனிதரை)வற்றை மேற்கண்ட வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்.

said...

GK,

ஆகா நிறைய பிம்பங்களை உடைக்கும் கருத்தை சொல்லியிருக்கீங்க..

சூப்பர்..

said...

// Sivabalan said...
GK,
ஆகா நிறைய பிம்பங்களை உடைக்கும் கருத்தை சொல்லியிருக்கீங்க..
சூப்பர்..
//

சிபா...!
நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் இங்கு சொல்வது,

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர் உறவு கலவாமை வேண்டும் என்று மற்றவர்களிடமிருந்து தள்ளி இருக்கவேண்டும் என்று எச்சரிக்கையை மட்டும் தான் எடுத்துக் கொள்கிறோம்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மை தனக்குள்ளேயும் உள்ளது என்பதை தனக்கு தானே ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பது தான் நான் சொல்ல முயன்றது.