Wednesday, December 06, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் ! (நிறைவு பகுதி)

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

விடாது கருப்பு ... ஆம் ! அவரின் குரல்...என்னிடம் ஏற்கனவே இருமுறை தொடர்பு கொண்டு என்பதிவை பற்றியும், சிங்கை தமிழ்முரசில் வெளிவந்த எனது கவிதையைப் பற்றிக் கருத்துக்கள் கூரிய குரல்தான் ... அதே குரல்.

'ம்.. எஸ்கே ஐயா பக்கத்தில் இருக்கார் ... ம் சொல்லுங்க சதீஷ் ! எப்ப வர்ரீங்க, நாங்க
லிட்டில் இந்தியாவில் வெயிட் பண்ணுகிறோம்'

'கண்ணன் ! அலுவலகத்தில் வேலை அதிகம் வருவது கஷ்டம்'

'பரவாயில்லை, அலுவலகம் முடிந்ததும் சாயங்காலம் 6 மணிக்கு மேல பாப்போமா ?'

'இல்லை கண்ணன், சாயங்காலம் கம்பெணி மீட்டிங் இருக்கு, வரமுடியாது, அவர்கிட்ட சொல்லுங்க'

ஏமாற்றமாக இருந்தது எனக்கு

'ஓகே, சரி அவருக்கிட்டேயே நீங்களே பேசிச் சொல்லிடுங்க' எஸ்கேவிடம் கைத் தொலைபேசியைக் கொடுத்தேன்

அவர் பேசினார். விடாது கருப்பு, எஸ்கேவிடமும் அதையே சொன்னதாக புரிந்தது,

அவரும் 'பரவாயில்லை அடுத்த முறை சந்திக்கிறேன் என்கிறீர்கள், சரி பார்கலாம்' என்று
சொல்லிவிட்டு நன்றி சொல்லிவிட்டு என்னிடம் கொடுத்தார்.

என்னிடம் கருப்பு 'எஸ்கேவையும், அவரது பதிவையும் எனக்கு(தனக்கு) ரொம்ப பிடித்துப் போனதாக அவரிடம் சொல்லுங்கள் என்றார்' அதை அப்படியே அவருடன் பேசிக் கொண்டே ரிபீட் செய்தேன்.

பின்பு 'போன் பண்ணி பேசியதற்கு நன்றி' நான் சொல்ல அவரும் "நன்றி கண்ணன்... அவருக்கும் என் நன்றியை சொல்லிடுங்க" என்பதுடன் அவருடன் தொலைபேசி தொடர்பு முடிந்தது.

பிறகு உடனே வாடகைக் கார் எடுத்து வீடு வந்து சேர்ந்தோம். மாலை 3.30 வீட்டிற்கு வந்ததும், 'உங்களுக்கு மஞ்சள் கலர் பிடிக்குமா ?' என்று கேட்டவர். புதிதாக ஒரு மஞ்சள் அரைக்கை சட்டையை என்னிடம் கொடுத்தார். ஏற்கனவே சோர்வாக இருந்தவர் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். காய்சல் வந்திருந்தது. படுக்கச் சொல்லிவிட்டு போர்வையை நன்கு போர்த்தி விட்டேன். பிறகு தெர்மா மீட்டரை வைத்து அவருக்கு சோதனை செய்து பார்த்ததில் 37.3 டிகிரி டெம்பரேச்சர் காட்டியது. தைலம் கேட்டார். பானடால் கேட்டார். கொடுத்தேன். போட்டுக் கொண்டார். அமிர்தாஞ்சனை கேட்டார். எடுத்துவந்து கொடுத்தேன். தேய்த்துக் கொண்டார். தேய்த்துவிடவா என்றேன். அவர் தயங்குவதற்குள் நானே அமிர்தாஞ்சனை கையில் எடுத்து இரண்டு கைகளாலும் நன்கு சூடுபரக்க தேய்த்து நெற்றியிலும் தோள்களிலும் தேய்த்துவிட்டேன். கால்களை பிடித்துவிட்டேன். தயங்கினாலும் நன்றி பெருக்குடன் பெருமிதமாக என்னைப் பார்த்தார். மருத்துவருக்கே மருத்துவாமா என்று கேட்பதைப் போல் இருந்தது. தூங்கச் சொல்லிவிட்டு நானும் ஓய்வெடுக்கச் சென்றேன். பின்பு எழுந்து

5 மணிக்கு மகளை அழைத்துவர சென்றேன். 10 நிமிடம் தான் பக்கத்தில் இருந்து அழைத்து வரவேண்டும். வந்ததும் மீண்டும் பார்த்தேன் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். தொட்டுப் பார்த்தேன் காய்ச்சல் குறைந்திருந்தது. மாலை 6.30 வாக்கில் என் மனைவி வேலையில் இருந்து திரும்பி வந்தார் வரும் போது வெஜிடேரியன் பீசா பீசாஹட்டிலிருந்து வாங்கி வந்திருந்தார். அவரின் உடல் நிலைப்பற்றி தெரிவித்து இருந்ததால். வந்தவுடன் தேனிர் போட்டு வைத்துவிட்டு அவரை எழுப்பினோம். தேனிரையும் குடிக்கச் சொல்லிவிட்டு, ஒரு துண்டு பீசாவையும் பிடிவாதமாக சாப்பிடச் சொன்னோம். பின்பு என் மனைவி என்னிடம் 'அவரை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவில்லையா ?' என்று கேட்க அவர் பார்க்கவேண்டும் என்று முன்பு சொன்னது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. 'மறந்துட்டேன், இப்போ எல்லோருமே போகலாம், முருகன் கோவிலைப் பார்த்துவிட்டால் போதும், தெம்பாகி கோவில் கோபுரத்தில் கூட ஏறிவிடுவார்' என்று அவரை கிண்டல் செய்ய. சிரித்துக் கொண்டே உடம்பு அசதியை பொருட்படுத்தாது போகலாம் என்றார்.

அப்போது மணி மாலை 7 ஆகி இருந்தது. பக்கத்தில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று விட்டு பின்பு முருகன் கோவிலுக்குச் செல்லாம் என்றேன். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஒரே கல்லிலான விஷ்வரூப ஆஞ்சினேயர் இருக்கும் என்பதால் ஆஞ்சநேயரைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றேன். அரைமணி நேர வாடகைக் கார் பயணம். அந்த கோவிலில் ஆஞ்சநேயருடன், மற்ற சாமிகளும் இருந்தது, ராகவேந்திரா, சத்திய சாய் என எல்லாவற்றையும் தரிசித்தார். உற்சாகம் திரும்பி இருந்தது. பின்பு அங்கிருந்து டோபிகாட்டில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வந்தோம் அங்கு முருகன் தரிசனம். புகைப்படம் எல்லாம் முடிந்தது. இரவு 9 மணி நெருங்கியிருந்தது. அங்கிருந்து லிட்டில் இந்தியாவில் இருக்கும் முஸ்தபா செண்டருக்கு வந்தோம். வாங்கவேண்டியவைகளை ஒவ்வொரு இடமாக நான் காட்ட பொருமையாக பார்த்து பார்த்து வாங்கினார். அவருக்கு நினைவு பரிசாக கொடுக்க ஒரு பஞ்சு தங்கத்திலால் ஆன கண்ணாடி கியூபுக்குள் வைக்கப்பட்ட சிறிய பிள்ளையார் (கார் உள்ளே வைப்பது) வாங்கினோம். முடித்துக் கொண்டு அருகில் இருந்த ஆனந்தபவனுக்குச் சென்று காஃபி மட்டும் குடித்தோம். வெளியில் சாப்பிட்டால் உடல் நலம் மறுபடியும் பாதிக்கும் என்பதால் வீட்டிற்கு சென்று ரசம் செய்து சாப்பிடலாம் என்று வீட்டிற்கு திரும்பி வந்தோம். இரவு 11.30 ஆகி இருந்தது. மனைவி வேகமாக சமையலை முடிக்க நானும் உதவிக்கு மிளகு-தக்காளி ரசம் செய்தேன் , இவரும் ஊருக்குச் செல்வதற்கு முடிச்சுகளை தயார் செய்தார். இரவு 12 மணிக்கு மேல் சாப்பிட்டுவிட்டு, மறுநாள் அதிகாலையில் எழுந்து ஏர்போர்ட் செல்ல வேண்டுமென்பதால் அவரை பானடால் எடுத்துகச் சொல்லி படுக்க வைத்துவிட்டு எல்லோரும் தூங்கி விட்டோம்.

றுநாள் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து, அவரை எழுப்பி தயாராக சொல்லிவிட்டு, அவர் தயாரானதும். ப்ளைட்டில் காலை உணவு தருவார்கள் என்று அவர் சொன்னதால் காஃபி மட்டும் கொடுத்து, எல்லோரும் குடித்துவிட்டு கிளம்பினோம். நாங்கள் மூவரும் கதவுக்கு வெளியில் வந்துவிட்டோம். 'என்ன ஒன்னும் சொல்லாமல் சட்டுன்னு கிளம்பிட்டிங்க ?' என்றவர் ஒரு நிமிடம் வாருங்கள் என்றார். கையில் அமெரிக்க டாலர்கள் இருந்தது. பூஜை அரைக்குச் சென்றவர் டாலர்களை பூஜைதாம்பாளத்தில் வைத்து அருகில் அழைத்தார். தம்பதிகளாக மீண்டும் அவர் காலில் விழுந்து ஆசி பெறவே பணத்தை தாம்பாளத்துடன் கொடுத்தார். நன்றி சொல்லி வாங்கி பூஜை அரையில் வைத்துவிட்டு ஏர்போர்டுக்கு நான்கு பேரும் வாடகைக் காரில் ஏறினோம்.

அவருடன் சேர்ந்திருக்கும் கடைசி மணித்துளிகள் நெகிழ்வாகவே இருந்தது. மனைவியும், குழந்தையும் சிறிது நேரம் பேசிவிட்டு, பின்பு புகைப்படம் எடுத்துவீட்டு 'இந்தியாவுக்கு சொல்லும் போது மறக்காம வந்துட்டு போங்கப்பா' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். நானும் அவரும் உணர்வு வெள்ளத்தில் இருந்தோம். கடைசி நிமிடம். 'எல்லாம் பேசிட்டோம், ரொம்பவே நிறைவாக இருந்தது, உங்கள் குடும்பத்தினருடமும், உங்களுடன் இருந்தது மறக்கமுடியாத நிகழ்வு' என்றார். 'பழகிய ஆறுமாதத்திற்குள் என்னைத் பார்க்க நீங்கள் ஓடோடி வந்தது என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியாத நிகழ்வு, இந்த வயதில் வாழ்கையில் மிகுந்த அனுபமிக்கவராக இருப்பவர் நீங்கள், எது சரி தவறு என்று நிச்சயம் உணர்ந்தே செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அப்படி நான் நினைக்கும் போது உங்களுக்கென்றே அன்பு செலுத்தி அரவணைக்க நூற்றுக்கணக்கான உறவினர்கள், நண்பர்கள், உண்டு, பாசமுடன் பழக பெற்ற பிள்ளைகள் உண்டு, இவையெல்லாம் இருந்தும் எனது அன்பையும் உயர்வாக நினைத்து அமெரிக்காவில் இருந்து நேராக சென்னைக்கு மட்டுமே சென்று திரும்ப வேண்டியவர் நீங்கள் ... என்னையும் என் குடும்பத்தையும் பார்க்க மட்டுமே தனிப் பயணமாக சென்னையிலிருந்து சிங்கபூர் வந்து சந்தித்ததை என்னால் மிகச் சதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, தங்கள் அன்பிற்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன்' என்றேன். அதன் பிறகு பேச்சு எழுவில்லை. கையை இருக பற்றிக் கொண்டார், கட்டி அணைத்துக் கொண்டார். விடைபெற்று உள்ளே செல்லும் இடத்திற்கு சென்றோம். பயனச்சீட்டை காவலர் சரி பார்த்து முடித்து அவர் கையில் திரும்ப கொடுத்தார், அருகில் தான் நின்று கொண்டிருந்தேன். எஸ்கே திரும்பி மறுபடியும் நெகிழ்வுடன் பார்த்தார் அந்த நொடியில் திரும்பவும் நான் அவரைக் கட்டிக் கொள்ள, கன்னத்தில் முத்தமிட்டார், உடனிடியாக நானும் முத்தமிட விடை கொடுத்துக் கொண்டோம்... உணர்வுகள் மனதை அழுத்த காவலரைக் கடந்து சென்றார். பார்த்துக் கொண்டிருந்தேன். 'நீங்கள் செல்லுங்கள், நீங்கள் சென்றால் தான் நான் உள்ளே செல்வேன்' என்றார். பை பை சொல்லிவிட்டு கண்ணுக்கு மறையும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றேன். அன்று அணிந்திருந்த சிவப்பு டீ சர்ட்டுடன் இருந்த அவரது உருவம் அன்று முழுவதும் கண்ணுக்குள் இருந்தது.

உறவினர்கள் விடைபெறும் போது, திரும்பவம் என்றாவது எதோ நிகழ்ச்சி, வைபவங்களில் நிச்சயம் அவர்களைப் பார்க்க முடியும். நண்பர்கள் பிரியும் போது அடுத்த சந்திப்பு எப்போது
என்று தெரியாது என்பதால் பிரிவின் போது எதையோ இழந்தது போன்று மனம் கனத்தது. இருந்தாலும். அன்பை முழுதுமாக இருவரும் வெளிப்படுத்திக் கொண்ட நினைவுகள், திரும்பவும் இவை நிகழும் என்று நினைத்து ஆறுதலடைய வைத்தது.

சக பதிவராக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தொலைபேசியில் பேச தொடங்கியபோது நட்பு என்று மாறியது. பின்பு குடும்பங்களைப் பற்றி பேசிப் பகிர்ந்ததில் உறவாக மாறியது. நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றார், வந்தார், இதுவரை முன் எப்போதும் பார்காத ஒருவரிடம் நமக்கு பொதுவாக இருக்கும் சங்கோஜ உணர்வு ஒரு துளிகூட இருவருக்கும் இல்லை. பலவருடங்களாக பழகியவர்கள் போல் மிகுந்த நெருக்கம் உள்ளவர்களாகத்தான் இருவருமே உணர்ந்தோம். நேரில் பார்த்து நெகிழ்ந்த போது உறவும் உன்னதம் ஆகியது.அவர் என்னுடன் இருந்த போதும், அதற்கு முன்பும், இன்றும், நானும் என் மனைவியும் அவருடன் பேசும் போது தனிப்பட்ட முறையில் அவரை அன்புடன் நாங்கள் உணர்ந்தே அழைப்பது 'அப்பா' என்ற உறவின் பெயரால்.

பின்குறிப்பு : இந்த தொடரை தொடர்ந்து படித்து பாராட்டிய சக நண்பர்களுக்கும், இதை தொடராக மகிழ்வுடன் எழுதி பதித்திக் கொள்ள காரணமாக இருந்த மருத்துவர் எஸ்கே ஐயா வுக்கும் நன்றி.

28 : கருத்துக்கள்:

said...

GK,

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. இந்த தொடரில் இது தான் சிகரம்.. அருமை..

உங்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டை உங்கள் அருமையான எழுத்தாற்றலால் உங்களோடே பயனித்த அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுத்துவிட்டீர்கள்..

இது.. இதுதான் ..GK..

இது போன்ற அருமையான தொடருக்கு காரனமான SK அய்யாவிற்கும் நன்றி.

நல்ல தொடரை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

said...

நெகிழ்ச்சியாக இருந்தது கோவியாரே!

said...

ஜீ.கே அய்யா,

அருமையாக எழுதியுள்ளீர்கள். பாச உணர்வை படிப்பவர் அனைவரும் உணர்ந்து நெகிழும் வகையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

பாலா

said...

நெகிழ்வாக இருந்தது...

said...

சாதாரண் விசயத்தையும் கூட ரசிக்கும்படியாகச் சொல்வார் அவர்
ரசிக்கும்படியான விஷயங்களை அற்புதமாகச் சொல்வார் அவர்
அவர்தான் உதிரிப்பூக்கள் என்ற படத்தை எடுத்த இயக்குனர் மகேந்திரன்

உங்கள் தொடர் பதிவு அவருடைய படத்தைப் பார்த்தது போன்ற தாக்கதை ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல!

SP.VR.SUBBIAH

said...

சிங்கை முடிஞ்சது. இனி அடுத்தது
நியூஸின்னு எஸ்கே கிட்டச் சொல்லணும்:-))))

நானும் தொடர் எழுத வேணாமா? :-))

said...

அனைவரின் பின்னூட்டத்தால் மிகவும் மனம் நெகிழ்ந்தேன்.


மிக அருமையாக கோவியார் என்னுடனான சந்திப்பை உணர்ச்சிபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

நானும், எனது குடும்பத்தினர் அனைவரும் இதைப் படித்து மகிழ்ந்தோம்.

இந்தப் பதிவைப் படித்து எனக்கு நியூஸியிலிருந்து கூட அழைப்பு வந்ததை ஒரு பெருமையாகவே கருதுகிறேன்.

சீக்கிரம் வருகிறேன், டீச்சர்!

இதைச் சிறப்பாக எழுதிய கோவியாருக்கும், என்னைச் சரிவர கவனித்துக்கொண்ட அவரது குடும்பத்தினர்க்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகச் சிறந்த ஓர் அனுபவத்திற்கு அனைவர்க்கும் மீண்டும் நன்றி.

said...

//Sivabalan said...
GK,

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. இந்த தொடரில் இது தான் சிகரம்.. அருமை..

//

சிபா,

தொடர்ந்து படித்துப் பாராட்டும் உங்கள் நட்பும் செயலும் உன்னதமானதே !

நன்றி !

said...

//நாமக்கல் சிபி said...
நெகிழ்ச்சியாக இருந்தது கோவியாரே!
//

பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது நாமக்கல்லாரே !

said...

//bala said...
ஜீ.கே அய்யா,

அருமையாக எழுதியுள்ளீர்கள். பாச உணர்வை படிப்பவர் அனைவரும் உணர்ந்து நெகிழும் வகையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

பாலா
//

பாலா... உண்மை நிகழ்வு... அதனால் வெள்ளிடை மலைபோல் உணர்வுகள் அதில் தெரிகிறது.

பாராட்டுக்கு நன்றி !
:)

said...

//Pot"tea" kadai said...
நெகிழ்வாக இருந்தது...
//

பொட்'டீ'கடை
நண்பரே பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி !

said...

// SP.VR.SUBBIAH said...
சாதாரண் விசயத்தையும் கூட ரசிக்கும்படியாகச் சொல்வார் அவர்
ரசிக்கும்படியான விஷயங்களை அற்புதமாகச் சொல்வார் அவர்
அவர்தான் உதிரிப்பூக்கள் என்ற படத்தை எடுத்த இயக்குனர் மகேந்திரன்

உங்கள் தொடர் பதிவு அவருடைய படத்தைப் பார்த்தது போன்ற தாக்கதை ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல!

SP.VR.SUBBIAH
//

சுப்பையா சார்,

உதாரணங்கள் கூறி பாராட்டும் உங்கள் பண்பும், நட்பும் உயர்ந்தது.

இணையத்தால், இதயங்களால் யான் பெற்ற இன்பம் இதுதான் !

said...

கோவியாரே,
உண்மையிலே படித்து நெகிழ்ந்து போனேன் .உங்கள் அன்பு மென்மேலும் வளர என் வாழ்த்துக்களும் பிராத்தனையும்.

said...

உங்கள் வழக்கமான நடையில் அருமையாக கலக்கிட்டீங்க...




(இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா கடக்கு...

இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிக்கிட்டிருக்கு...

அது அவனுங்க விதி)

said...

ஜிகே,

உங்கள் எழுத்தும், உங்கள் இருவரின் ஆழ்ந்த நட்பும், புரிதலும் பாரட்டுக்குறியது....வாழ்த்துக்கள்..... எல்லாப்பதிவர்களுக்குள்ளூம் இந்த மாதிரி நட்பும், புரிதலும் ஏற்ப்படும் நாள் என்னாளோ?.

said...

//என்னையும் என் குடும்பத்தையும் பார்க்க மட்டுமே தனிப் பயணமாக சென்னையிலிருந்து சிங்கபூர் வந்து சந்தித்ததை என்னால் மிகச் சதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, தங்கள் அன்பிற்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன்'//

GK
இப்ப அதிகாலை மணி மூன்று!
நான்கு பகுதிகளையும் இரண்டு, மூன்று முறை படித்து விட்டேன்!

"மிகவும் நெகிழ்ச்சி" என்று ஒற்றை வரியில் சொல்ல மனம் வரவில்லை!

எனவே ஒண்ணே முக்கால் அடியில் சொல்கிறேன்!

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்!

said...

"ஒருமையுடன் நினது திருமலர் அடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்",
"நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்",

என்று முற்றும் துறந்தவர்க்கே இது போன்ற நட்பில் ஆசை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! :-)

பல சமயங்களில் நல்ல நண்பர்களைச் சந்தித்த போது இருந்த மகிழ்ச்சியை விட, அவர்கள் விடைபெற்றுச் சென்ற பின் மனது அசை போடுமே, அது இன்னும் இனிதா இருக்கும்!

நான் இது போல சில சமயங்களில் எண்ணி எண்ணி மகிழ்ந்துள்ளேன், என் நண்பனைப் பற்றி! இதில் சுவை என்னவென்றால் அவன் இருப்பதும் சிங்கை தான்! Jalan Membina

உங்கள் நடை அந்த ஞாபகங்களை எல்லாம் கொண்டு வந்து விட்டது! மிக்க நன்றி!!

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

GK
இப்ப அதிகாலை மணி மூன்று!
நான்கு பகுதிகளையும் இரண்டு, மூன்று முறை படித்து விட்டேன்!

"மிகவும் நெகிழ்ச்சி" என்று ஒற்றை வரியில் சொல்ல மனம் வரவில்லை!

எனவே ஒண்ணே முக்கால் அடியில் சொல்கிறேன்!

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்! //

கே.ஆர்.எஸ்,

நட்பை போற்றும் உங்கள் மொழியை எப்படி பாராட்டுவேன் !

நட்பில் திளைத்தவர்களுக்கு கிடைக்கும் இன்பம் உங்கள் பின்னூட்டம் வழியாக தெரிகிறது.

உங்கள் நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள். என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

said...

மிக அருமையான விவரிப்பு. மிக அருமையான நட்பு. உண்மையிலேயே நெகிழ வைக்கிறது உங்களிடையே காணப்படும் இந்த நட்பு.

said...

//துளசி கோபால் said...
சிங்கை முடிஞ்சது. இனி அடுத்தது
நியூஸின்னு எஸ்கே கிட்டச் சொல்லணும்:-))))

நானும் தொடர் எழுத வேணாமா? :-))
//

துளசியம்மா...!

எஸ்கே நியூசிக்கு வருவார்... உங்களுக்கு ஒரு அண்ணன் கிடைப்பார்.

:))

said...

//SK said...
அனைவரின் பின்னூட்டத்தால் மிகவும் மனம் நெகிழ்ந்தேன்.

மிக அருமையாக கோவியார் என்னுடனான சந்திப்பை உணர்ச்சிபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

நானும், எனது குடும்பத்தினர் அனைவரும் இதைப் படித்து மகிழ்ந்தோம்.//

எஸ்கே ஐயா,

முழுவதும் படித்து, அங்கங்கே நகைச்சுவையாக பாராட்டி பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி !

said...

// ஜோ / Joe said...
கோவியாரே,
உண்மையிலே படித்து நெகிழ்ந்து போனேன் .உங்கள் அன்பு மென்மேலும் வளர என் வாழ்த்துக்களும் பிராத்தனையும்.
//

ஜோ,
உங்கள் வாழ்த்துக்கும் பிரார்தனைக்கும் நன்றி !

said...

//செந்தழல் ரவி said...
உங்கள் வழக்கமான நடையில் அருமையாக கலக்கிட்டீங்க...//

நட்சத்திரம் [வால் :)] வந்து வாழ்த்தியதற்கு நன்றி. பதிவை படிக்கவில்லை என்று மட்டும் தெரிகிறது.
:)))

said...

//மெளல்ஸ், பெங்களூர் said...
ஜிகே,

உங்கள் எழுத்தும், உங்கள் இருவரின் ஆழ்ந்த நட்பும், புரிதலும் பாரட்டுக்குறியது....வாழ்த்துக்கள்..... எல்லாப்பதிவர்களுக்குள்ளூம் இந்த மாதிரி நட்பும், புரிதலும் ஏற்ப்படும் நாள் என்னாளோ?.
//

மெளல்ஸ் ...!

வாழ்த்துக்களுக்கு நன்றி ... நல் நட்புகளை எல்லோரும் வளர்க்க வேண்டும் ... இந்த தொடர் அதற்கு சாட்சியாக இருக்கும்

said...

கண்ணன்,
பெயருக்கு ஏற்றார்ப்போல்,
ஒரு நல்லவர் உங்களுக்குப் பதிவுலகத்திலிருந்து கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
உண்மையான அன்புக்கு என்றும்
வெல்லும் வலிமை உண்டு.
அபூர்வமான அன்பு வலையில்,
வலையின் மூலமாகவே உங்களுக்குக் கிடைத்ததுதான்
அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்.

said...

நெகிழ்ச்சியா இருக்கு கோவி..

ரெண்டு பேருக்கும் சுத்திப் போடச் சொல்லுங்க ...

said...

//செந்தில் குமரன் said...
மிக அருமையான விவரிப்பு. மிக அருமையான நட்பு. உண்மையிலேயே நெகிழ வைக்கிறது உங்களிடையே காணப்படும் இந்த நட்பு.
//

செந்தில் குமரன்...!

தொடர்ந்து படித்து பாராட்டியதற்கு நன்றி.

said...

//பொன்ஸ் said...
நெகிழ்ச்சியா இருக்கு கோவி..

ரெண்டு பேருக்கும் சுத்திப் போடச் சொல்லுங்க ... //
வழிமொழிகிறேன் நானும்!