Monday, December 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா

திரைகலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் அவ்வப்போது சிங்கப்பூரில் நடக்கும், இவற்றில் பலவற்றை பார்க்கச் சென்றுருக்கிறேன். முதல் முறையாக தமிழ் பண்ணிசை விழா சிங்கப்பூரில் நடப்பதாக நண்பர் குழலி பதிவிட்டு இருந்தார். அது பற்றிய செய்தி சிங்கை தமிழ் நாளிதழ் தமிழ்முரசுவிலும் வந்திருந்தது. தமிழ் இசை என்பதால் ஆர்வம் ஏற்பட சென்று வந்தேன்.

கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா தமிழக பா.ம.க தலைவரும், பொங்குதமிழ் பண்ணிசை மன்ற நிறுவனருமான மருத்துவர் ராமதாசு அவர்கள் தலைமையில் இனிதே நடந்தேறியது.

நிகழ்ச்சியை தொகுத்துவழங்கிய சிங்கப்பூர் வானொலியின் அறிவிப்பாளர் திருமதி. மீனாட்சி சபாபதி சங்கீத மூம்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர்கள் எவ்வாறு தமிழ் இசையிலிருந்து தெலுங்கு மற்றும் வடமொழி கீர்த்தனைகளை அமைத்து இந்திய இசைக்கு அடிகோலினார்கள் என்று ஆரம்பித்து அருமையான உரையுடன் தமிழ் இசை துடங்கியது.



திரை இசைப் பாடல்கள் மருந்துக் கூட இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் பண்ணிசையுடன் தேவாரம் முதல் பாபநாசம் சிவன் முதலியோர் பாடல்களும், குனங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இஸ்லாமிய பாடல்களும் , வேதநாயகம் பிள்ளை , வீரமாமுனிவர் தேம்பாவனி என பல்சமய பாடல்களும் சிறப்பாக பாடப்பட்டன.



முத்தாய்ப்பாக துள்ளல் இசையுடன் கூடிய கிராமியப் பாடல்களுடன் இசை பாடல்கள் முடிவுற்றதும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், திரு ஜி.கே மணி வரவேற்புரை, எம்.எல்.ஏ, திரு ஏ.கே.மூர்த்தி எம்.பி வழிமொழிய, இறுதியாக மருத்துவர் ராமதாசு தமிழிசைப் பற்றிய தலைமை உரை நிகழ்த்த விழா சிறப்புடன் முடிவுற்றது.

விழாவில் நான் குறையாக கண்டது,

முழுக்க முழுக்க டிசம்பர் கச்சேரிகளைப் போல் வாய்ப்பாட்டுகள் பாடியது கொஞ்சம் அயற்சியை கொடுத்தது. பாடிய பாடல்கள் நடனத்துக்கு ஏற்றப் பாடல்களாக இசையுடன் இருந்திருந்ததால் நாட்டிய நடனம் அதனுடன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கடைசியாக துள்ளல் இசை கிராமியப் பாடல்களை 30 நிமிடங்கள் பாடியதற்கு பதிலாக இடையிடையே பாடியிருந்தால் இசைவிழாவில் இடையிடையே பலர் எழுந்து சென்றதை குறைத்திருக்கலாம்.

நிறையாக பார்த்தது,

குத்தாட்டமோ, திரை கலைஞர்கள் ஒருவர் கூட இடம் பெறாத இந்த நிகழ்ச்சி 4 மணி நேரத்திற்கும் மேல் ஏற்பாட்டளர்கள் நடத்திக்காட்டியது ஒரு சாதனைதான்.

மேலும் இந்த இசைவிழா பற்றிய பல தகவல்களை நண்பர் குழலி என்னுடன் பகிர்ந்து கொண்டார் அவற்றை அவர் தனது பதிவில் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

படங்கள் உதவி : பதிவு நண்பர் குழலி

11 : கருத்துக்கள்:

said...

உங்களுடைய பதிவிலிருந்து, உங்களுக்கொரு அருமையான இசையனுபவமாக இல்லையென்றாலும் வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்குமென நினைக்கிறேன். ஆயினும் நீங்கள் சுட்டிய குறைகள் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் அருமையானதாக இருந்திருக்கலாம்.

ஆயினும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுவது வருங்கால சந்ததியினருக்கு/தற்கால சந்ததியினருக்கே தமிழிசை பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

said...

பொங்குதமிழ் பண்ணிசை நிகழ்ச்சியில்.... ஒரு இசை நிகழ்ச்சி என அறிவித்திருந்த நிகழ்ச்சியில்... நாட்டியம் வேண்டுமென்ற உங்கள் ஆசை ....கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லை?
:))

மற்றபடி, கிராமியத் துள்ளல் பாடலகளை இடையிடையே வைத்திருக்கலாமே என்ற உங்கள் கருத்து.... மிகவும் சரியானதே!

நல்லதொரு விமரிசனத்திற்கு நன்றி, கோவியாரே!

said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, GK ஐயா.

லெக்-டெம் என்கிறார்கள்; lecture-demonstration. இது இளைய தலைமுறையிடம் நன்கு ஹிட் ஆகிறது!

பல்சமயப் பாடல்கள் பாடப்பட்டது சிறப்பு. நாட்டுப் பாடல்கள் இன்னும் சிறப்பு!

ஏற்புரை, அணிந்துரை, வழிமொழிதல் எல்லாம் தவிர்த்து, ஒரு சிறப்புரை மட்டும் வைத்து, இசை-நடனம் இரண்டும் சேர்ந்தால் இன்னும் பலரைச் சென்றடையும். அடுத்தடுத்த ஆண்டுகளில் முதிர்ச்சியுறும் என்று நம்புவோம்!

said...

//பொங்குதமிழ் பண்ணிசை நிகழ்ச்சியில்.... ஒரு இசை நிகழ்ச்சி என அறிவித்திருந்த நிகழ்ச்சியில்... நாட்டியம் வேண்டுமென்ற உங்கள் ஆசை ....கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லை?
:))
//



எஸ்கே ஐயா,
சிங்கப்பூர் போன்ற நாட்டில் சங்கீதம் அறியாத உடல் உழைப்பாளிகளாக இருக்கும் எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து 4 மணி நேரம் வாய்ப்பாட்டுகளை கேட்பது (அது தாலாட்டாக இருந்தாலும் கூட) அலுப்பை தரும் என்று நினைக்கிறேன். எனக்கு அலுப்பாகத்தான் இருந்தது. இசை நிகழ்ச்சியில் நாட்டியம் இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியா தெரியவில்லை. மீறினால் தவறில்லை என்று நினைக்கிறேன்.

said...

இசை விழாவைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி கோவி. கண்ணன் அண்ணா.

இங்கேயும் தமிழ்சங்கத்தார், மலையாள - தெலுங்கு சங்கத்தார்கள் வைக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு முடிந்த வரை சென்று வருகிறேன். அண்மையில் மலையாள சங்கத்தார்கள் நடத்திய எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்குச் சென்று வந்தோம்.

said...

"இசை" நிகழ்ச்சியில் ஒரு நாட்டியத்தை எதிர்பார்த்தது தவறென்று இன்னமும் நினைக்கிறேன்!

said...

//SK said...
"இசை" நிகழ்ச்சியில் ஒரு நாட்டியத்தை எதிர்பார்த்தது தவறென்று இன்னமும் நினைக்கிறேன்!
//

எஸ்கே ஐயா,
நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். ஏற்பாட்டளர்கள் அதை உணர்ந்து தான் வெறும் வாய்ப்பாட்டு கச்சேரியை நடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்க முடிகிறது.

said...

எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டிய வடுவூர் குமார் அவர்களுக்கு நன்றி !

said...

//ஆயினும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுவது வருங்கால சந்ததியினருக்கு/தற்கால சந்ததியினருக்கே தமிழிசை பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.//

பொட்டிக்கடையாரே,

தமிழிசை என்ற ஒன்றை தமிழர்கள் மறந்துவிட்ட நிலையில் முற்றிலும் தமிழிசைப் பாடல்கள் வியக்கும் படி இருந்தது நிகழ்ச்சி.

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS)பல்சமயப் பாடல்கள் பாடப்பட்டது சிறப்பு. நாட்டுப் பாடல்கள் இன்னும் சிறப்பு!
//

ரவி,

இறை இசையே தமிழின் இயல்(பான) இசை என்பதை நிறுபித்த மற்றொரு அருமையான நிகழ்ச்சியாகவும் இருந்தது.

கருத்துக்கு நன்றி !

said...

// குமரன் (Kumaran) said...
இசை விழாவைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி கோவி. கண்ணன் அண்ணா.

இங்கேயும் தமிழ்சங்கத்தார், மலையாள - தெலுங்கு சங்கத்தார்கள் வைக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு முடிந்த வரை சென்று வருகிறேன். அண்மையில் மலையாள சங்கத்தார்கள் நடத்திய எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்குச் சென்று வந்தோம்.
//

நன்றி குமரன்,

அதுபோல் மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும் தமிழிசையின் பெருமையை கூறி அவர்களையும் நம் தமிழிசை பக்கம் இழுத்துவாருங்கள்.